”பெண் சிசுக் கொலை தடுப்போம்”- போலியான முகாம் நடத்தி குழந்தைகள் கடத்திய மூவர் கைது
சென்னை: பெண் சிசு கொலை தடுப்பு என்ற பெயரில் உசிலம்பட்டியில் போலி முகாம் நடத்தி பெண் குழந்தைகளை கடத்தியவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அடுத்த தாம்பரம் சேலையூர் அருகே மாடம்பாக்கம் ஜெயவந்த்புரத்தில் தனியார் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இதனை ரசுல் ராஜ் என்பவர் நடத்தி வந்தார். இந்த காப்பகம் அருகில் இவரது மாமியார் கனகஜாய் அவீடு உள்ளது. இந்த வீட்டில் சட்டவிரோதமாக 3 வயதிற்குட்பட்ட 4 குழந்தைகள் அடைத்து வைத்து இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பிற்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து சமூகநலத்துறை அதிகாரிகள், கடந்த வாரம் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, 4 வயதில் 3 பெண், ஒரு ஆண் குழந்தை அங்கு இருப்பது தெரிந்தது. அந்த குழந்தைகளை அதிகாரிகள் மீட்டனர். மேலும் ஒரு குழந்தையை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து போலீசாரின் விசாரணையில், "பெண் சிசு கொலைகள் அதிகம் நடைபெறும் மாவட்டங்களுக்கு இந்த காப்பகத்தினர் செல்வார்கள். அங்கு, பெண் குழந்தைகளை நாங்கள் எங்கள் காப்பகத்தில் சிறப்பாக வளர்ப்போம். வெளிநாடுகளில் உள்ள தம்பதிகளுக்கு தத்து கொடுத்தால், உங்கள் குழந்தைகளுக்கு வளமான வாழ்வு கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறுகின்றனர்.
பெண் குழந்தையை கொல்ல மனமில்லாத சில பெண்கள், அந்த குழந்தைகளை இவர்களின் ஆசை வார்த்தையை நம்பி ஒப்படைத்துள்ளனர். இதற்காக உசிலம்பட்டியில் பெண் சிசு கொல்லுவதை தடுக்கும் சிறப்பு முகாம் நடத்தினர். அதற்கு சில அரசியல்வாதிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களை அனுசரித்து நடந்தனர். இதுபோன்ற முகாம்களை நடத்த தமிழகத்தில் யாருக்கும் அரசு அனுமதி வழங்க வில்லை. குழந்தை வேண்டாம் என்றால் தொட்டில் குழந்தை திட்டத்தில்தான் போட வேண்டும்.
ஆனால், இவர்கள் இந்த குழந்தைகளை இலவசமாக வாங்கி வந்து, பெரிய பணக்காரர்கள் மற்றும் குழந்தை இல்லாத வெளிநாட்டு தம்பதிகளுக்கு பல லட்சம் விலை நிர்ணயித்து விற்றுள்ளனர். இதற்கு சில அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் உடந்தையாக இருந்துள்ளனர் என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. எனவே, சட்டவிரோதமாக குழந்தைகளை காப்பகத்தில் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்து ரசுல் ராஜ், அவரது மனைவி ஜெயகுமாரி, மாமியார் கனகஜாய் ஆகியோரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.