பயிரை மேய்ந்த வேலி... பயணிகளிடம் திருடிய போலீசார் கைது- வீடியோ
சென்னை ரயில் நிலையத்தில் மூன்று போலீசார் வட மாநில பயணிகளைத் தாக்கி அவர்களிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த வட மாநில பயணிகளைத் தாக்கிய போலீசார் பணத்தை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் பேரில் 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சென்ட்ரல் நிலையத்தில் தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்கின்றனர். இவர்களுக்கு ரயில்வே போலீசார் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ரயில் பயணிகள் காத்திருப்பு அறையில் பீகாரைச் சேர்ந்த பீரேந்திர ரெட்டி என்பவர் மற்ற பயணிகளுடன் சேர்ந்து காத்திருந்தார்.
அப்போது தமிழ்நாடு சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த இருதயராஜ், அருள்தாஸ், ராமலிங்கம் ஆகிய மூன்று போலீசார் பீரேந்திர ரெட்டி உள்ளிட்ட சில பயணிகளைத் தாக்கி அவர்களிடம் இருந்த பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடியுள்ளனர்.
அதனையடுத்து பீரேந்திர சிங், ரயில்வே போலீசாரிடம் சென்று புகார் அளித்துள்ளார். புகாரை விசாரித்த ரயில்வே போலீஸ் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் அவர்கள் மூவரையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அதனையடுத்து திருட்டில் ஈடுபட்ட மூன்று போலீசாரும் சிறையில் அடைக்கப்பட்டனர். பயணிகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய போலீசாரே திருடியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.