சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் வழிப்பறி செய்த காவலர்கள் அதிரடி கைது!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் வழிப்பறி செய்த சிறப்புப்படை காவலர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் வழிப்பறி செய்த சிறப்புப்படை காவலர்கள் 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீகாரைச் சேர்ந்த பிஸ்வந்த் ரெட்டி. இவர் சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தார். அப்போது அங்குவந்த சிறப்பு படை காவலர்கள் அருள்தாஸ், இருதயராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோர் பிஸ்வந்த் ரெட்டியை தாக்கியுள்ளனர். பின்னர் அவரிடமிருந்த பணம் மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பிஸ்வந்த் ரெட்டி ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய ரயில்வே ஐஜி பொன் மாணிக்கவேல் உத்தரவிட்டார்.
இதில் காவலர்கள் 3 பேரும் பிஸ்வந்த் ரெட்டியை தாக்கி அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றது நிரூபணமானது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்ய ரயில்வே ஐஜி பொன் மாணிக்கவேல் உத்தரவிட்டார்.
அதன்படி தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான சிறப்பு படை காவலர்கள் அருள்தாஸ், இருதயராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசாரே பயணிகளை தாக்கி வழிபறியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.