கோவையிலிருந்து காரிலேயே லண்டன் பயணிக்கும் 3 பெண்கள்.. ஏன் தெரியுமா?
பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோவையைச் சேர்ந்த 3 பெண்கள் காரில் லண்டன் செல்லும் பயணம் நேற்று தொடங்கப்பட்டது.
கோவை: பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்துவதற்காக 3 பெண்கள் கோவையில் இருந்து கார் மூலம் லண்டன் செல்லும் பயணத்தை நேற்று தொடங்கினர்.
கோவை கல்வியறிவு இயக்கம் சார்பில் கோவையைச் சேர்ந்த மீனாட்சி அரவிந்த் (45), மூகாம்பிகா ரத்தினம் (38), மும்பையைச் சேர்ந்த பிரியா ராஜ்பால் (55) ஆகிய 3 பெண்கள் தங்கள் பயணத்தை நேற்று தொடங்கினர். தமிழக நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் வேலுமணி காரை கொடியசைத்து பெண்களின் பயணத்தை தொடக்கி வைத்தார்.
இதுகுறித்து அப்பெண்கள் கூறுகையில், பெண்களுக்கு கல்வி வழங்குவது குறித்தும், பெண்கள் முன்னேற்றம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த பயணத்தை மேற்கொள்கிறோம். மேலும் ஒரு பெணஅ வருவதாக இருந்தது உடல்நிலை கோளாறு காரணமாக அவர்கள் கடைசி நேரத்தில பயணத்தை ரத்து செய்துவிட்டதால் நாங்கள் மூவரும் செல்கிறோம்.
பெண் கல்வி
பெண்கள் படித்தால் அவர்கள் மூலம் ஒட்டுமொத்த அவரது குடும்பமே கல்வி அறிவு பெறுவர்.அனைவரும் கல்வியறிவு பெறுவது என்பது நல்ல விஷயம், இதற்காக நாங்கள் லண்டனுக்கு காரில் செல்கிறோம். உலகில் உள்ள எந்த இந்திய பெண்ணும் இன்னும் ஒடுக்கப்பட்டும், பின்தங்கியும் இருக்கக் கூடாது என்றனர்.
24 நாடுகள் வழியாக
மியான்மர், லோவோஸ், தாய்லாந்து, சீனா, ரஷ்யா. மத்திய ஐரோப்பா, போலந்து உள்ளிட்ட 24 நாடுகள் வழியாக லண்டன் சென்றடைய உள்ளனர். மொத்தம் 24,000 கி.மீ. தூரத்தை மொத்தம் 70 நாள்களில் கடக்கவுள்ளனர். அதாவது வரும் ஜூன் 5-ஆம் தேதி லண்டனை அடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டிலும்
மூவரும் ஒவ்வொரு நாட்டிலும் இறங்கி பெண் கல்வி குறித்த முக்கியத்துவத்தையும், பெண்கள் முன்னேற்றம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவர். இந்த 70 நாள்கள் பயணமானது இந்தியா சுதந்திரம் அடைந்த 70ஆவது ஆண்டில் உள்ளதை நினைவுகூரத்தக்கதாகும். தினமும் 500 கி.மீ.தூரத்தை கடப்பதே இவர்களது லட்சியமாகும்.
புதுவை ஆளுநர்
தங்கள் பயணத்தின்போது புதுவை சென்ற அவர்கள் அங்கு முன்னாள் காவல் துறை அதிகாரியும், துணை நிலை ஆளுநருமான கிரண் பேடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதேபோல் இந்தியாவின் கடைசி எல்லையான இ்ம்பால் சென்றடைந்தவுடன் மணிப்பூர் மாநில ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லாவை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்த பயணத்துக்கு ரூ.60 லட்சம் செலவு செய்யப்படுவதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.