முன்னாள் நீதிபதி கர்ணன்.... சர்ச்சைகள் முதல் கைது நடவடிக்கை வரை...நடந்தது என்ன...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணன் சிக்கிய சர்ச்சைகள் முதல் கைது நடவடிக்கை வரை நடந்தது என்ன என்பது குறித்து டைம்லைன் தொகுத்து வழங்கப்படுகிறது.
சென்னை: கோவையில் கைது செய்யப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணன் சிக்கிய சர்ச்சைகள் தொடங்கி கைது நடவடிக்கை வரை நடந்தது குறித்து டைம்லைன் இதோ...
* தன்னுடன் பணியாற்றும் நீதிபதிகள் தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் தன்னை துன்புறுத்துவதாகவும், பழிவாங்கப்படுவதாகவும் கடந்த 2011-ஆம் ஆண்டு தேசிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான ஆணையத்தில் புகார் அளித்தார்.
* கடந்த பிப்ரவரி 2016-ஆம் ஆண்டு கர்ணனை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தது. இதை ஏற்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரினார் கர்ணன்.
* தான் இடமாற்றப்படுவது குறித்து அந்த ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கர்ணனுக்கு எந்த வித பணியும் வழங்க வேண்டாம் என்று அவரை பிப்ரவரி 11-ஆம் தேதிக்குள் கொல்கத்தா நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
* மார்ச் 2016-ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.
* கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் பணியாற்றும் 20 நீதிபதிகள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆகியோர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அவர்களின் பெயர்கள் அடங்கிய கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்தார்.
* உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிபதிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த கர்ணனுக்கு பிப்ரவரி 13-ஆம் தேதி-க்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியது. எனினும் அவர் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகவும் இல்லை விளக்கம் அளிக்கவும் இல்லை.
* மே 1-ஆம் தேதி அவருக்கு மனநல பரிசோதனை மேற்கொள்ளுமாறு கொல்கத்தா அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கர்ணன் மறுப்பு தெரிவித்ததோடு தனது மனநிலை நிலையாக உள்ளதாகவும், இந்த பரிசோதனை உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளுக்கே தேவைப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
* மே 8-ஆம் தேதி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் 8 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்
டனை விதித்ததோடு அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார்.
* கர்ணனின் தண்டனை விவரங்களால் ஆத்திரமடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மே 9-ஆம் தேதி நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்ததனர்.
* ஜூன் 12-ஆம் தேதி நீதிபதியாக இருந்த கர்ணன் தலைமறைவாக இருந்தபடியே ஓய்வு பெற்றார்.
* இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவர் இன்று (ஜூன் 20-ஆம் தேதி) கோவையில் மலுமிச்சம்பட்டியில் கைது செய்யப்பட்டார்.