நாமக்கலில் ஸ்டாலின்: கோழிகளுக்கு ஹாய்... குழந்தைக்கு முத்தம்... பாட்டிக்கு பரிவு...
நாமக்கல்: திமுக ஆட்சிக்கு வந்ததும் வெளிப்படையான முட்டை கொள்முதல் டெண்டர் நடைபெறும் நாமக்கலில் கோழிபண்ணையாளர்களிடம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். பரமத்தியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய ஸ்டாலினிடம், தமிழக அரசு சார்பில் மருந்து தயாரிப்பு தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மேற்கொண்டு வரும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணை உரிமையாளர்கள், மாணவர்கள், விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். திமுக ஆட்சியில் இனி சிறு தவறுகள் கூட நடக்காது என்று அப்போது அவர் உறுதியளித்தார்.
கோழிப்பண்ணையில் ஸ்டாலின்
கோழிகளுக்கு பெயர் பெற்ற நாமக்கல் மாநகரில் கோழிப்பண்ணைக்குள் சென்று பார்வையிட்டார் ஸ்டாலின். முட்டைகளை கையில் எடுத்து பார்த்த அவர், பண்ணையாளர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது அவர்கள், முட்டை, கறிக்கோழி விலை சரிவால் தொடர்ந்து பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்று தெரிவித்தனர்.
தொடரும் நஷ்டம்
தொடரும் நஷ்டத்தால் பண்ணையாளர்கள் தொழிலை கைவிடும் சூழல் உருவாகியுள்ளது என்று கூறிய அவர்கள், கோழிப் பண்ணையாளர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். பண்ணையாளர்களாக இருந்த எங்களை அதிமுக அரசு அடிமைகளாக மாற்றி விட்டது என்றும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
வெளிப்படையான ஏலம்
ஒரு சிலரிடமிருந்து கமிஷன் பெறுவதற்காக, தரமில்லாத முட்டையை அதிக விலைக்கு கொள்முதல் செய்வதால், ஒரு நாளைக்கு ஒரு கோடி ருபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக குற்றம் சாட்டினார்கள். தொடர்ந்து பேசிய ஸ்டாலின், உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் திமுக ஆட்சியில் நிறைவேற்றித்தரப்ப்படும் என்றும் வெளிப்படையான ஏல முறை பின்பற்றப்படும் என உறுதி அளித்தார்
குழந்தைக்கு முத்தம்
தொடர்ந்து நடைபயணம் மேற்கொண்ட ஸ்டாலினை ஏராளமான பெண்களும், பொதுமக்களும் சந்தித்தனர். தன்னை சந்திக்க வந்த குழந்தைகளை தூக்கி கொஞ்சினார் ஸ்டாலின்
பாட்டிக்கு பரிவு
நடைபயணத்தின் போது தன்னை பார்த்து ஆர்வத்துடன் பேச வந்த பாட்டியிடம் நலம் விசாரித்தார். அப்போது முதியோர் உதவித் தொகை குறித்து தெரிவித்த புகாரை பரிவுடன் கேட்டுக்கொண்டார் ஸ்டாலின். திமுக ஆட்சிக்கு வந்த உடன் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றார்.
மாணவர்களுடன் பேச்சு
பரமத்தியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய ஸ்டாலினிடம், தமிழக அரசு சார்பில் மருந்து தயாரிப்பு தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். மருந்தாளுநர் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும், நாமக்கல் மாவட்டத்தில் அதிக நூலகங்கள் அமைக்க வேண்டும் என்றும் கல்வியியல் கல்லூரியியில் பட்டம் பெற்றோருக்கு தகுந்த வேலை வாய்ப்பை உருவாக்கவேண்டும் மாணவர்கள் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து பேசிய ஸ்டாலின், மாணவர்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை திமுக உருவாக்கும் என உறுதி அளித்தார்.
சத்துணவில் வாழைப்பழம்
பரமத்திவேலூர் அருகே மணியனூரில் விவசாயிகளுடன் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர்கள், சத்துணவு திட்டத்தில் வாழைப்பழம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நூறு நாள் வேலைத்திட்டப் பணிகளை விவசாயத்துக்கு விரிவுபடுத்த வேண்டும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூர்வாரவும் வலியுறுத்தினர். அவர்கள் மத்திய பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வரும் போது விவசாயிகளின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றார்.