தமிழகத்தில் பிறந்ததாகவே எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்: தருண்விஜய் பெருமிதம்
சென்னை : தமிழகத்தில் பிறந்ததாகவே எண்ணி மகிழ்ச்சியடைவதாக, உத்தரகாண்டில் பிறந்த பாஜக எம்.பி. தருண் விஜய் தெரிவித்துள்ளார்.
திருக்குறளை உலக அளவில் எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் பாஜக எம்.பி. தருண் விஜய். இந்நிலையில், புதுவையை சேர்ந்த பாக்கியராஜ் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு என்ற குறும்படத்தை தயாரித்துள்ளார்.
சுமார் ஒரு மணி நேரம் ஓடும் இந்த குறும்பட வெளியீட்டு விழா புதுவையில் நடைபெற்றது. இதில் உத்திரகாண்ட் மாநில பாஜக எம்.பி. தருண் விஜய் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
உத்தரகாண்டில் பிறந்தநான் தமிழகத்தில் பிறந்ததாகவே எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். எந்த சமூகம் தங்களது மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை பாதுகாத்து அதன் வழியில் செயல்படுகிறதோ அந்த சமூகமே நிலைத்திருக்கும். அதனை மறந்துவிடும் சமுதாயம் வீணாகிவிடும்.
இந்த குறும்படத்தை டெல்லிக்கு எடுத்துச்சென்று இந்தி உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட நடவடிக்கை எடுப்பேன். திருக்குறளை நாடு முழுவதும் கொண்டு சென்றிட பாராளுமன்றத்தில் பேசி வலியுறுத்துவேன். நாட்டில் துளசிதாசர், வால்மீகியை மட்டும் போற்றினால் போதாது. திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசனையும் போற்றுவதே முழுமையாக அமையும்.
உலகம் முழுவதும் பரவியுள்ள தீவிரவாதத்தை திருக்குறளின் கருத்துகள் மூலமே ஒழிக்க முடியும். திருக்குறளின் கருத்துகளை வடஇந்தியாவில் உள்ள 500 பள்ளி, கல்லூரிகளில் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசும் இதற்கு உதவி புரியும்.
திருவள்ளுவர் இந்தியா முழுமைக்கும் சொந்தமானவர். நம் நாட்டில் மேல்தட்டு மக்கள், கீழ்தட்டு மக்கள் மற்றும் சாதி, மத வேறுபாடுகள் உள்ளது. ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் வேண்டும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். மக்களை ஏற்றத்தாழ்வோடு நடத்துவது திருக்குறளை பின்பற்றுவதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும். இதற்காக பொங்கல் விழாவினை ஒரு ஆதிதிராவிடர்கள் கிராமத்தில் தங்கி கொண்டாட போகிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.