நெல்லையில் தலித் பெண்ணை ஆணவக் கொலை செய்த தம்பதிக்கு தூக்கு.. அதிரடி தீர்ப்பு!
நெல்லையில் இளம்பெண் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தம்பதிக்கு கூடுதல் அமர்வு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
திருநெல்வேலி: நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோ நகரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன்,25. செங்குளம் அருகே ரயில்வே கேட் கீப்பராக வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முன் இவரும், தச்சநல்லூரைச் சேர்ந்த காவேரியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
விஸ்வநாதன் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். காவேரி வேறு சமூகத்தைச் சேர்ந்தவர். இருவரும் வெவ்வேறு பிரிவினர் என்பதால் பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து விஸ்வநாதன், மனைவியுடன் வெளியூர் சென்று விட்டார்.
இதுகுறித்து அவரது தந்தை சண்முகவேல் பாளையங்கோட்டை போலீசில் கொடுத்த புகாரில், காதல் திருமணம் செய்த மகனை காணவில்லை. பெண்ணின் குடும்பத்தினரால் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது, பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி காவேரியின் தந்தை சங்கரநாராயணன் புதுமண தம்பதிகளை தேடி இளங்கோ நகருக்கு வந்தார். ஆனால் அவர்கள் அங்கு இல்லை. விஸ்வநாதனின் அக்காள் கல்பனா, 27 மட்டும் வீட்டில் இருந்தார். அவரை சங்கரநாராயணன் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார். படுகாயம் அடைந்த அவர் வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கல்பனாவிற்கு ஒன்றரை வயதில் குழந்தை ஒன்று உள்ளது.
ஆணவக்கொலை செய்த வழக்கில் சங்கரநாராயணன், செல்லம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நெல்லை மாவட்டம் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வாதங்கள் முடிவடைந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் நீதிபதி அப்துல் காதர் தம்பதிகள் இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். தண்டனை விபரத்தை இன்று அறிவிப்பதாகவும் கூறினார்.
இந்த நிலையில் தலித் பெண்ணை வெட்டிக்கொலை செய்த வழக்கில் சங்கரநாராயணன், செல்லம்மாள் ஆகியோருக்கு தூக்கு விதித்து நீதிபதி உத்தரவிட்டார். சாதி ஆணவக்கொலையில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.