திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.கே. போஸ்... பயோடேட்டா
மதுரை: திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் முன்னாள் எம்.எல்.ஏ ஏ.கே. போஸ். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் இருக்கும் இவர் 2006, 2011 சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டுமுறை எம்.எல்.ஏவாக பதவி வகித்துள்ளார்.
மதுரையில் ஜீவா நகரில் வசித்து வரும் ஏ.கே. போஸ் டிராவல்ஸ் அதிபர். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் இருந்தாலும் பரபரப்பான அரசியல்வாதியில்லை என்பதால் பலருக்கும் இவரைப் பற்றி தெரியாது.
67 வயதாகும் ஏ.கே. போஸ் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 1993ம் ஆண்டு எம்.ஏ அரசியல் அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். இவரது தந்தை பெயர் கருப்பத்தேவர். இவரது மனைவி பெயர் பாக்யலட்சுமி.
டிராவல்ஸ் அதிபரான போஸ் கடந்த 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2006ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டசபைக்குள் நுழைந்தார். 2007ம் ஆண்டு சட்டசபையில் நடைபெற்ற அமளி துமளியில் தொப்பியை சபாநாயகர் மேஜை மீது வீசியதாக பத்து நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கட்சித்தலைவி ஜெயலலிதாவின் கவனம் ஈர்த்தார்.
2011ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு ஒதுக்கப்படவே, போஸ், மதுரை வடக்குத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டாவது முறை எம்.எல்.ஏவானர். 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் வடக்குத் தொகுதியில் போட்டியிட மனு அளித்தார் கூடவே திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் துண்டு போட்டார் ஆனால் அவருக்கு ஜெயலலிதா வாய்ப்பு அளிக்கவில்லை. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் ஏ.கே. போஸ்.
மீண்டும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சட்டசபைக்குள் அடியெடுத்து வைப்பாரா?