முன்னாள் அமைச்சர் சாமிநாதன், கண்ணப்பன் மகன் முக.முத்து.. திருப்பூர் மாவட்ட திமுக வேட்பாளர்கள் பயோடேட
சென்னை: முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ. சாமிநாதன், முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பனின் மகன் மு.க. முத்து ஆகியோர் திருப்பூர் மாவட்ட திமுக வேட்பாளர்களில் விஐபிக்கள் ஆவர்.
திருப்பூர் மாவட்ட திமுக வேட்பாளர்களின் பயோடேட்டா
க.செல்வராஜ்
திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் க. செல்வராஜ். கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த இவர் கடந்த 1969-ஆம் ஆண்டில் இருந்து திமுக பனியன் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். திமுகவில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். கடந்த 2007-இல் திருப்பூர் மாநகராட்சியின் முதல் மேயராக செல்வராஜ் பொறுப்பேற்றார். தற்போது வடக்கு மாவட்டச் செயலாளராக உள்ளார்.
மு.பெ.சாமிநாதன்
திருப்பூர் வடக்குத் தொகுதி வேட்பாளர் சாமிநாதன். முன்னாள் அமைச்சர். கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். 2006 தேர்தலில் வெள்ளக்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். அமைச்சராக இருந்தார். தற்போது மாநில இளைஞர் அணி துணைச் செயலாளராக இருக்கிறார்.
எஸ்.கிருஷ்ணமூர்த்தி
பல்லடம் தொகுதியில் கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். இவரும் கொங்கு வேளாளர் கவுண்டர் தான். 1984ம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக உள்ளார். கடந்த 2015 முதல் திமுக ஒன்றியச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக புள்ளியப்பம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
மு.க.முத்து
உடுமலைப்பேட்டையில் மு.க.முத்து போட்டியிடுகிறார். முன்னாள் அமைச்சர் கண்ணப்பனின் மகன்தான் மு.க.முத்து. பொள்ளாச்சியில் வசித்து வரும் இவர் திமுகவில் 2014 முதல் தலைமை செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.
ரா.ஜெயராமகிருஷ்ணன்
மடத்துக்குளம் வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன். உடுமலைப்பேட்டையில் கடந்த 20 வருடமாக வக்கீலாக இருந்து வருகிறார். கொங்கு வேளாளர். 1996 முதல் 2006-ஆம் ஆண்டு வரை துங்காவி ஊராட்சித் தலைவராகவும், 2006 முதல் 2010 வரை மடத்துக்குளம் ஒன்றியக் குழுத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளராக உள்ளார்.
இ.ஆனந்தன்
அவிநாசி (தனி) தொகுதி வேட்பாளர் இ. ஆனந்தன். தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த இவர் 1982-ஆம் ஆண்டு முதல் கட்சியின் உறுப்பினராக உள்ளார். ஒருங்கிணைந்த கோவை மாவட்ட துணைச் செயலாளராகவும், மாவட்ட கவுன்சிலராகவும், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவரது தந்தை ஜி.இளங்கோ முன்னாள் எம்எல்ஏ ஆவார்.