கொங்கு மண்டலத்தை திமுக கோட்டையாக மாற்ற தயாராகும் தேமுதிக மாஜி மாவட்ட செயலாளர்கள்
சென்னை: கடைசியாக நடந்த மாவட்டச் செயலர்கள் கூட்டம் வரை விவாதித்து பார்த்து விட்டோம், எங்கள் கருத்துக்களை கேப்டன் ஏற்பதாக இல்லை. விரைவில், கொங்கு மண்டல நிர்வாகிகள், திமுகவில் வில் இணைய உள்ளனர். கொங்கு மண்டலத்தை, திமுகவின் கோட்டையாக மாற்றிக் காட்டுவேன் என்று சவால் விட்டுள்ளார் தேமுதிகவின் திருப்பூர் மாவட்ட செயலாளராக இருந்து நேற்று திமுகவில் இணைந்துள்ள தினேஷ்குமார்.
சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டி என்று அறிவித்த விஜயகாந்த் சில தினங்களில் மக்கள் நலக்கூட்டணியுடன் அணி சேர்ந்து போட்டியிடுவது என அறிவித்த போது, தேமுதிகவில் இருந்து விலகி, பல நிர்வாகிகள் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியும் தேமுதிகவும் மிக மோசமான தோல்வியை சந்தித்தது.
தேர்தலுக்கு பின்னரும் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் தேமுதிகவின் நிர்வாகிகள் இடம் மாறினர். பல மாவட்ட செயலாளர்கள் தேமுதிகவில் விலகி வந்தனர். சில தினங்களுக்கு முன்னர் மயிலாடுதுறை, சட்டசபைத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பால.அருட்செல்வம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர்கள் இருவர் உட்பட பலர் திமுகவில் இணைந்தனர். இப்போது அடுத்த விக்கெட் விழுந்திருப்பது திருப்பூரில். தேமுதிகவின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் தினேஷ்குமார் முக்கிய பொறுப்பாளர்களுடன் தேமுதிகவில் இருந்து விலகி தினேஷ்குமார் நேற்று மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
சட்டசபைத் தேர்தலின் போது தேமுதிகவில் பெரும் அதிருப்தி வெளிப்பட்ட போது, முதலில் தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டவர் தினேஷ்குமார். ஆனால் வடசென்னை யுவராஜ் தொடங்கி குமரி தினேஷ், தஞ்சை மாவட்ட செயலாளர்கள் வரை முகாம் மாறிய பின்னரும் திருப்பூரில் தேமுதிகவிற்காக உழைத்து வந்தார் தினேஷ்குமார்.
திமுகவில் திருப்பூர் தினேஷ் குமார்
உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இப்போது மாவட்ட நிர்வாகிகளுடன் நேற்று ஸ்டாலினை சந்தித்து, கட்சியில் இணைத்துக்கொண்ட தினேஷ்குமார், விரைவில் கொங்கு மண்டலத்தில் உள்ள 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திமுகவில் இணைய உள்ளதாகவும், இதற்கான விழாவுக்கு ஸ்டாலினிடம் தேதி கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.
எந்த பலனும் இல்லை
தேமுதிக துவங்கியது முதல் அக்கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறேன். 3 முறை தேர்தலில் போட்டியிட்டிருக்கிறேன். ஆனால் கட்சியின் செயல்பாடு தொண்டர்களுக்கானதாகவும், மக்களுக்கானதாகவும் இல்லை. கடைசியாக நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரை விவாதித்து பார்த்து விட்டோம். இந்த முறை சற்று கடுமையாகவே பேசினோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
திமுகவின் கோட்டை
தேமுதிகவில் எங்கள் கருத்துக்களை ஏற்பதாக இல்லை. இயக்கத்துக்காக உழைத்த தொண்டர்கள் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை என்பதை மாற்றி அதை திமுக கோட்டையாக்கி காட்டுவோம். உள்ளாட்சி தேர்தல் என்பதால் பதவிக்காக நான் இப்போது திமுகவில் சேரவில்லை. அது தொடர்பாக நான் கேட்கவும் இல்லை. திமுகவில் சேர்ந்ததில் எனக்கான கோரிக்கை என எதுவுமில்லை என்று கூறியுள்ளார் தினேஷ்
தேமுதிகவிற்கு பின்னடைவு
லோக்சபா, சட்டசபை தேர்தல் தோல்விகளால் ஏற்பட்ட சரிவுகளில் இருந்து மீளவேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து போராட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் விஜயகாந்த். உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவுக்கு வந்துள்ளார் விஜயகாந்த், ஆனால் முக்கிய நிர்வாகிகள் விலகல், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பலரும் தயக்கம் காட்டுவது தேமுதிகவிற்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்னவோ உண்மைதான்.
கொங்குமண்டலத்தில் தேமுதிக
திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல் என கொங்குமண்டலத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலரும் திமுக, அதிமுக பக்கம் சாய்ந்து விட்டனர். ஏற்கனவே பல்லாயிரக்கணக்கானோர் சமீபத்தில் சந்திரகுமார் தலைமையில் திமுகவில் இணைந்தனர். இப்போது திருப்பூர் தினேஷ்குமார் தரப்பும் 50 ஆயிரம் பேரை இணைப்பேன் என்று கூறியுள்ளார். கொங்குமண்டலத்தில் தேமுதிகவின் நிலை பரிதாப நிலைதான் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.