திருவண்ணாமலை தீபத்திருவிழாவும் கிரிவலத்தின் மகிமையும்....
மு. செந்தில் நாதன்
நினைத்தாலே முக்தி தரும் புகழ்கொண்டது திருவண்ணாமலை. சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக போற்றப்படுகிறது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மகாதீபா திருவிழா பிரசித்தி பெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர்.
திருமாலுக்கும், பிரம்மனுக்கும் இடையே யார் பெரியவர்கள் என்ற போட்டியால் எழுந்த தான் என்ற அகந்தையை போக்க சிவபெருமான் திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளே கார்த்திகைதீப திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்பட்டு வருகிறது. பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீப நாட்களில் பல லட்சம் பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி கொடுத்ததால் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை 6 மணிக்கு 2, 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது
ஜோதி வடிவான நட்சத்திரம்
கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியானது கார்த்திகை நட்சத்திரத்தில் வருவதால் கார்த்திகை மாதம் என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் என்பது ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாகும். ஆறு நட்சத்திரங்களையும் இணைத்தால் ஜோதி வடிவம் போலவும். தீயவைகளை நீக்கும் கத்தி போலவும் காணப்படுகிறது.
பஞ்சபூதங்கள்
சந்திரன் உடல், மனம், உப்பு, உணவு மற்றும் நீருக்குக் காரகன் ஆகிறார். நாம் தீய எண்ணம், தீய பழக்கவழக்கம் கொண்டவர்களின் சேர்க்கையினால் நமது உடலும் மனமும் எதிர்மறை சக்திகளால் சூழப்படுகிறது. நம்முடைய ஆற்றல் குறைகிறது. எனவே நாம் இழந்த நேர்மறை சக்தியை பெருக்கிக் கொள்வதற்கு பஞ்சபூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் உதவிபுரிகிறது.
உடலும் பஞ்சபூதங்களும்
நமது உடல் மற்றும் மனமானது சீராகச் செயல் படுவதற்கு பஞ்சபூதங்களும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். இல்லையென்றால் உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட நோய்களை அனுபவிக்க நேரிடுகிறது.
கிரிவல மகிமை
திருவண்ணாமலை திருத்தலத்தில் பௌர்ணமி சந்திரன் நீர் என்ற பஞ்சபூதத்தாலும், நமது வெறும் கால்கள் நிலத்தில் படும்பொழுது நிலம் என்ற பஞ்சபூதத்தாலும், நமது தலை உச்சி ஆகாயத்துடன் தொடர்பு கொள்வதால் ஆகயம் என்ற பஞ்சபூதத்தாலும், தீபத்தின் சக்தியானது நெருப்பு என்ற பஞ்சபூதத்தாலும், நமது உடல் மலையை சுற்றி வீசும் காற்றுடன் தொடர்பு கொள்வதால் காற்று என்ற பஞ்சபூதத்தாலும் நமது உடல் மற்றும் மனமானது சுத்திகரிக்கப்பட்டு பிரபஞ்ச நேர்மறையால் சூழப்படுகிறது.
சித்தர்கள் கிரிவலம்
இத்திருத்தலத்தில் மலையே சிவலிங்கமாக பாவிக்கப்படுகிறது. முற்காலத்தில் பதினாறு கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட இந்த மலையை ஐந்து முறை வலம் வந்து தமது உடலில் பிரபஞ்ச நேர்மறை சக்தியை அதிகப்படுத்திக் கொண்டு தமது வாழ்க்கைப் பாதையை வெற்றிப் பாதையாக மாற்றிக் கொண்ட சித்தர்கள் இங்கு வசித்துள்ளனர்.
பௌர்ணமி கிரிவலம்
பௌர்ணமி தினத்தன்று மேற்கொள்ளப்படும் கிரிவலத்திற்கு அத்தனை சிறப்பு உள்ளது என்று முற்றம் உணர்ந்த ஞானிகளும், யோகிகளும் தெரிவிக்கின்றனர்.ஊழ்வினை நீக்கும் தலம் திருவண்ணாமலை. அண்ணாமலையாரை கிரிவலமாக வந்து வணங்கினால் மட்டுமே ஊழ்வினை தீரும் என்பது ஐதீகம்.
எந்த நாட்களில் என்ன நன்மை
ஞாயிறு அன்று வலம்வருவதால் நோய்கள் நீங்கும், திங்கள் அன்று வலம்வந்தால் மன தைரியம் ஏற்படும், செவ்வாய் அன்று வலம்வந்தால் எதிரி மற்றும் கடன் தொல்லையிலிருந்து விடுதலை ஏற்படும், புதன் அன்று வலம்வருவதால் கலைகள் மற்றும் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும், வியாழன் அன்று வலம்வருவதால் ஆன்மீக ஞானம் பெருகும், வெள்ளிக்கிழமை அன்று வலம்வருவதால் செல்வ நிலை உயரும்.
வாழ்வில் வெற்றி கிடைக்கும்
கிரிவலம் செல்லும் போது நமது சிந்தனையானது சிவனைப் பற்றி மட்டுமே இருக்க வேண்டும். ஓம் சிவாய நம, நமச்சிவய போற்றி, சிவன் பாடல்கள் பாடுவது, சிவ புராணம் கேட்பது போன்ற செயல்களில் மட்டும் நாட்டம் செலுத்தி தியானித்து கார்த்திகை தீபம் மற்றும் சிவபெருமானை தரிசித்து வந்தால் நமது வாழ்வில் எல்லாவித வளங்களையும் பெற்று நம்முடைய வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.