”பட்டை, நாமம் பரக்கச் சாத்தி, மொட்டையும் போட்டு” - விவசாயிகள் நூதன போராட்டம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் விவசாயிகள் சர்க்கரை ஆலைகள் நிலுவைத் தொகை வழங்கக் கோரி மொட்டை அடித்து, பட்டை நாமம் போட்டு நூதனமான முறையிலான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் ஒரு டன்னுக்கு ரூபாய் 300 வீதம் பிடித்து வைத்துள்ளன. இந்த நிலுவைத் தொகையை வழங்கக் கோரி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நிலுவைத் தொகையை உடனே வழங்கக் கோரி திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் எதிரே விவசாயிகள் செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு, பகல் பாராமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், போராட்டத்தின் 2 ஆவது நாளான நேற்று விவசாயிகள் மொட்டை அடித்தும், பட்டை நாமம் போட்டுக் கொண்டும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். நிலுவைத் தொகையை பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.