குற்றத்தை உணர்ந்தேன். இனி தவறு செய்யமாட்டேன்.. மன்னிப்பு கோரி கருணாநிதிக்கு டிகேஎஸ்.இளங்கோவன் கடிதம்
சென்னை : தான் அளித்த பேட்டி தி.மு.க. தலைமைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியதையடுத்து, மன்னிப்பு கோரி அக்கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு, டி.கே.எஸ்.இளங்கோவன் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குற்றத்தை உணர்ந்ததால், இனி அதுபோன்ற தவறுகளை செய்யமாட்டேன் என்றும் அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 170 தொகுதிகளில் போட்டியிடும் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் அண்மையில் ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார்.
அவரது கருத்தினை தி.மு.க. தலைமை மறுத்தது. இது குறித்து தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், டி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி கொடுத்ததாக வெளியான செய்திகளுக்கும், தி.மு.க. கருத்துகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அவர் பெயரில் வந்துள்ள செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், தி.மு.க.விற்கு சம்பந்தம் இல்லை என்றும் கிருணாநிதி கூறியிருந்தார்.
இதையடுத்து விளக்கம் அளித்த இளங்கோவன், அது தனது தனிப்பட்ட கருத்து என்றும், கட்சித் தலைமையின் முடிவல்ல என்றும் கூறினார்.
இந்நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் மன்னிப்பு கோரி இளங்கோவன் இன்று (வெள்ளிக்கிழமை) கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், குற்றத்தை உணர்ந்ததால் இதுபோன்ற தவறுகளை இனிமேல் செய்யமாட்டேன் என தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.