ஆர்எஸ்எஸ்காரர் ஜனாதிபதி வேட்பாளர் - எதற்காக பயந்தோமோ அது நடந்துவிட்டது: டிகேஎஸ் இளங்கோவன் அதிர்ச்சி
ஜனாதிபதி வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ்காரரான ராம் நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். எதற்காக பயந்தோமோ அது நடந்து விட்டது என்று திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பில் எது நடக்கக் கூடாது என்று பயந்தோமோ அது நடந்து விட்டது என்று திமுக செய்தித் தொடர்பாளரும், ராஜ்ய சபா எம்பியுமான டி.கே.எஸ். இளங்கோவன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பாஜக தனது வேட்பாளராக பிகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த்தை அறிவித்தது.
கூட்டத்தில் முடிவு
இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது: ஜனாதிபதி தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் டெல்லியில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது. அதில் விவாதித்து ஜனாதிபதி யார் என்ற முடிவை எடுப்போம்.
ராம்நாத்தை திமுக ஆதரிக்காது
வெங்கய்ய நாயுடு திமுகவிடம் ஆதரவு கேட்டது என்பது வழக்கமான ஒன்றுதான். நாங்கள் அதற்கு ஆதரவு தர முடியாது. எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து எடுக்கும் முடிவின் அடிப்படையில்தான் திமுகவின் நிலைப்பாடு இருக்கும்.
தேர்தல்தான் தீர்மானிக்கும்
வெற்றி தோல்வி என்று பார்த்து எதையும் செய்ய முடியாது. ஜனாதிபதி தேர்தலில் யாரை முன் நிறுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கு பெரும்பான்மை இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அது தேர்தல் முடிவில்தான் தெரிய வரும்.
நடக்கக் கூடாதது..
ஜனாதிபதி தேர்தலில் எது நடக்கக் கூடாது என்று பயந்தோமோ நடந்துவிட்டது. ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவரை பாஜக நிறுத்திவிட்டது. இது நடந்திருக்கக் கூடாது. அந்த வேட்பாளரை திமுக ஆதரிக்க முடியாது என்று டி.கே.எஸ். இளங்கோவன் திட்டவட்டமாக தெரிவித்தார்.