தமாகா வளர்ந்து நிற்பது பிறருக்கு மன உளைச்சலை தருகிறது... காங்கிரசை குத்திய ஜி.கே.வாசன்
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பூவோடும், காயோடும், கனியோடும் வளர்ந்து நிற்கிறது. இது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது. பிறருக்கு மருட்சியையும்,மன உளைச்சலையும் தருகிறது என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
அரசியலில் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்றும் சட்டமன்ற தேர்தலில் த.மா.கா. முதன்மை கட்சியாக விளங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொதுக்குழு கூட்டம்
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜி.கே.வாசன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம்தேதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். இதைத்தொடர்ந்து கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
தலைவராக ஜி.கே.வாசன் தேர்வு
கூட்டம் தொடங்கியதும், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. தேர்தலை ஞானதேசிகன் நடத்தினார். தலைவர் பதவிக்கு ஜி.கே.வாசன் மனுத்தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக ஜி.கே.வாசனை தலைவராக தேர்ந்தெடுத்தனர். பின்னர் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அறிவிப்பை ஞானதேசிகன் வெளியிட்டார். .
வளர்ந்து நிற்கிறோம்
தொண்டர்களின் வாழ்த்துக்களுக்கு மத்தியில் ஜி.கே.வாசன் பேசினார். அப்போது அவர், கட்சி தொடங்கி 5 மாதம் கழித்து முதல் பொதுக்குழு கூட்டத்தை நடத்தியிருக்கிறோம். நாம் விதைத்த விதை வளர்ந்து, துளிர் விட்டு, இலையோடும், பூவோடும், காயோடும், கனியோடும் வளர்ந்து நிற்கிறது. இது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது. பிறருக்கு மருட்சியை தருகிறது, மன உளைச்சலை தருகிறது.
சரித்திர சாதனை
நாம் யாரை பற்றியும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ய வேண்டாம். இந்த இடைப்பட்ட காலத்தில் 45 லட்சம் உறுப்பினர்கள் நம்முடைய கட்சியில் இணைந்து இருக்கிறார்கள். இத்தனை உறுப்பினர்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல. இது ஒரு சரித்திர சாதனை.
லட்சியப்பயணம்
பெருந்தலைவரின் நேர்மை, எளிமை, தூய்மை என்ற கொள்கைகளை பின்பற்றி, மூப்பனாரின் வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்ற லட்சியத்தை நோக்கி நாம் பயணம் செய்வோம். ஒரு நல்ல அரசியல் கட்சியாக சரியான பாதையில், முறையாக நாம் சென்று கொண்டிருக்கிறோம்.
முதன்மை கட்சி
இது கட்சி தொண்டர்களால், மக்கள் வழி நடத்தப்படும் கட்சி. நாம் எடுக்கும் முடிவு மக்கள் எண்ணப்படி இருக்கும். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக இருக்கும். 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தமிழகத்தின் முதன்மை கட்சியாக இருக்கும் என்பதை நாம் நிரூபிப்போம்.
ஊழலற்ற நிர்வாகம்
அதற்காக முழு மூச்சாக உழைப்போம். வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி, ஊருக்கு ஊர் எங்கும் த.மா.கா. பெயரை பதிவு செய்வோம். நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை தருவதற்கு நாம் வழி வகுப்போம், துணை நிற்போம்.
பூரணமதுவிலக்கு
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாவிட்டால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஜி.கே.வாசனுக்கு அதிகாரம்
தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை, தமிழ் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றிட கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுக்கு துணை நிற்கவும்,கட்சிக்கு மாநில, மாவட்ட, துணை அமைப்புகளின் நிர்வாகிகளை நியமனம் அதிகாரம் அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
லோக் ஆயுக்தா
தமிழகத்தில் லோக் அயுக்தா அமைக்க இந்த கூட்டம் வலியுறுத்துகிறது. நீராதாரத்தை பெருக்க வேண்டும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை தொடர்ந்து தடையின்றி செயல்படுத்த வேண்டும்.
விவசாய கடன் வட்டி
வேலை கிடைக்காத மாணவர்கள் பெற்ற கடனை ரத்து செய்ய வேண்டும். விவசாய கடன் வட்டியை உடனே குறைக்க வேண்டும்.
குண்டர் சட்டம்
செம்மர கடத்தல் மாபியாக்களையும், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகளையும் இனம் கண்டு அவர்களை ஆந்திரா அரசு உடனே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.
நீராதாரம்
கடலில் வீணாக கலக்கும் நீரை சேமிக்க தமிழக அரசு திட்டமிட்டு, நதிகளின் குறுக்கே தடுப்பணைகளை உருவாக்கி, நீராதாரத்தை உருவாக்க வேண்டும்.
காங்கிரஸ் அட்டாக்
பொதுக்குழு கூட்டத்தில் போராட்ட அறிவிப்பையும் வெளியிட்டார் ஜி.கே.வாசன் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி வரும் மே மாதம் 31ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் மிகப்பெரிய ஆர்பாட்டம் நடத்தவும் தமாகா முடிவு செய்துள்ளது.