காமராஜர், மூப்பனார், ராஜீவ்காந்தி சிலைகளை திறக்கும் ஜி.கே.வாசன்- ராகுல்காந்திக்கு அழைப்பு
சென்னை: நெல்லை மாவட்டத்தில் ஒரே இடத்தில் நிறுவப்பட்டுள்ள காமராஜர், மூப்பனார், ராஜீவ்காந்தி சிலைகளை ஜி.கே.வாசன் திறந்துவைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த விழாவில் பங்கேற்க ராகுல்காந்திக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ் புத்தாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கத்திப்பாரா ஜனார்த்தனம் தலைமை தாங்கினார். மூத்த தலைவர்கள் ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், பொறுப்பாளர் மால்மருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிண்டி மம்மு வரவேற்றார்.
நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு தையல் எந்திரம் உள்பட பல்வேறு நல உதவிகளை ஜி.கே.வாசன் வழங்கினார். இதனை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாநில செயலாளர் ஜோதி தலைமையில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்வின்போது, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட த.மா.கா. பொறுப்பாளர்கள் கிளாடிஸ் லில்லி, என்.டி.எஸ்.சார்லஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
தென் சென்னை மாவட்ட பொறுப்பாளர் முகமது பயாஸ் ஏற்பாட்டில் பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட துணைத்தலைவர் புரட்சி மணி தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
சிலையை திறப்பது யார்?
நெல்லை மாவட்டம் பணகுடியில் காமராஜர், மூப்பனார், ராஜீவ்காந்தி சிலைகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் விரைவில் திறக்கப்படும் என்றும், இந்த சிலைகளை திறக்க அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தி தமிழகம் வர இருப்பதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிருந்தார்.
பணகுடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த 3 சிலைகளையும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜோதி என்பவர் தனது சொந்த இடத்தில் நிறுவியுள்ளதாக கூறப்படுகிறது. அவர் நேற்று த.மா.கா.வில் இணைந்தார். இதனால் அந்த சிலைகளை திறப்பது காங்கிரஸ் கட்சியா? தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியா? என்பதற்கு பதில் அளித்து, சிலை அமைப்பு குழு தலைவர் ஜோதி கூறியதாவது:-
பணகுடியில் எனது சொந்த இடத்தில் தலைவர்கள் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை திறக்க யாரும் உரிமைகோர முடியாது. ஜி.கே.வாசன் இந்த சிலையை திறந்து வைப்பார். ராகுல்காந்தி இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்து இருக்கிறோம். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இந்த சிலைகளை பற்றி பேசுவதற்கு உரிமை இல்லை. விரைவில் திறப்பு விழாவிற்கான தேதியை முடிவு செய்ய இருக்கிறோம் என்று தெரிவித்தார்.