ஆர்கே நகரில் தமாகா போட்டியில்லை- ஜிகே வாசன்! யாருக்குமே ஆதரவும் இல்லையாமே!!
ஆர்கே நகர் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடாது என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தமாகா போட்டியிடாது என்றும் யாருக்குமே ஆதரவு தரப்போவதில்லை எனவும் அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக, ஓபிஎஸ் அதிமுக, சசிகலா அதிமுக, மேட் தீபா, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, பாஜக, சிபிஎம் ஆகியவை வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, பாமக ஆகியவை தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த வரிசையில் தற்போது தமிழ் மாநில காங்கிரஸும் ஆர்.கே.நகரில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.
சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் ஜி.கே. வாசன், ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடாது என்றார். ஆர்.கே.நகரில் எந்த கட்சிக்கு ஆதரவு என்ற கேள்விக்கு, யாருக்குமே ஆதரவு இல்லை எனவும் வாசன் பதிலளித்துள்ளார்.
திமுக கூட்டணியில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்பதில் தமாகா முனைப்பாக இருந்தது. ஆனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பதால் தமாகாவின் கனவு நனவாகவில்லை. இதனால் வேறுவழியில்லாமல் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.