தமாகா பொதுக்குழுவில் பங்கேற்க வந்த தாராபுரம் வட்டச்செயலாளருக்கு மாரடைப்பு...!
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த தாராபுரம் வட்டச் செயலாளர் செல்வபழனிச்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை 108 ஆம்புலன்சில் அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்ததை அடுத்து அவர் அபாயக்கட்டத்தை தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமாகாவின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் இன்று நடந்தது. இன்று காலை 9 மணி முதல் பொதுக்குழு கூடிய அரங்கத்துக்குள் தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டனர். அரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கட்டண அரங்குகளில் ரூ.500 செலுத்தி பொதுக்குழு உறுப்பினர்களாக தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டனர்.
தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட ஜி.கே.வாசன் 12.05 மணிக்கு பொதுக்குழு அரங்கத்துக்கு வெளியே தமாகா கொடியை ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
கட்சித்தலைவர் தேர்தல்
கூட்டம் தொடங்கியதும் 12.15 மணிக்கு கட்சி தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை ஞானதேசிகன் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து ஜி.கே.வாசன் தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்தார். வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் ஜி.கே.வாசன் தமாகா தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
தீர்மானம் நிறைவேற்றம்
அதை தொடர்ந்து கட்சியின் செயல் திட்டங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு ஜி.கே.வாசன் பொதுக்குழுவில் உரையாற்றினார். தமாகாவின் முதல் பொதுக்குழு என்பதால் தொண்டர்கள் உற்சாகமாக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
சிறப்பு விருந்தினருக்கு பாராட்டு
திராவிட மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஆ.ஞானசேகரன், அருந்ததி மக்கள் கட்சி தலைவர் வலசை ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். அவர்கள் ஜி.கே.வாசனுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
திடீர் மாரடைப்பு
இதனிடையே பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த தாராபுரம் வட்டச் செயலாளர் செல்வபழனிச்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை 108 ஆம்புலன்சில் அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்ததை அடுத்து அவர் அபாயக்கட்டத்தை தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.