திமுக நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமாகா பங்கேற்கும்- வாசன் அறிவிப்பு
சென்னை: திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமாகா பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். தமாகா சார்பில் தானும், கட்சியின் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்போம் என வாசன் தெரிவித்துள்ளார். அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு நடத்தவில்லை என்பது வருத்தமளிக்கிறது என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பிரச்சினையில் கர்நாடகாவில் அனைத்துக்கட்சியினரும் ஓரணியில் நிற்கின்றனர். அதே போல தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பது திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்கட்சியினரின் கோரிக்கையாகும்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் தமிழக அரசுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அவசியமில்லை என்பது அதிமுகவின் வாதம். எனினும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூரில் திமுக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது. அந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், அனைத்துக் கட்சி கூட்டத்தை ஆளும் கட்சி கூட்டாவிட்டால் எதிர்கட்சியான திமுக கூட்டும் என்று என்று அறிவித்தார்.
சொன்னதோடு மட்டுமல்லாது நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வத்தை சந்தித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தார்.
அதன்பின்னரும் அரசு சார்ப்பில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுவதாக தெரியவில்லை. இதனையடுத்து நாளை 25ம் தேதி திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் ஆளும் அதிமுக பங்கேற்காது. பாஜகவும் பங்கேற்காது என்று மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். மக்கள் நலக்கூட்டணி கட்சி தலைவர்களும் அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியும், திமுகவின் கூட்டணியில் உள்ள கட்சிகளும் பங்கேற்கும் எஎன்று அறிவித்துள்ளன. அதேபோல தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமாகா சார்பில் தானும், கட்சியின் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்போம் என வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றிருக்க வேண்டும். ஆனால் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டவில்லை. அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு நடத்தவில்லை என்பது வருத்தமளிப்பதாகவும் கூறினார். இது அரசியல் சார்ந்த நிகழ்வு அல்ல. பொதுப்பிரச்சினைகளில் தமாகா பங்கேற்கும் என்றும் கூறினார். 3 தொகுதி தேர்தலில் தமாகா போட்டியிடுவது பற்றி அந்த மாவட்ட நிர்வாகிகளின் கலந்து ஆலோசித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.