சோமையாஜி திடீர் ராஜினாமா- தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக முத்துக்குமாரசாமி!
சென்னை: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.எல். சோமையாஜி திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக புதிய தலைமை வழக்கறிஞராக ஆர். முத்துக்குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய நவநீதகிருஷ்ணன் 2013-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால் புதிய அரசு தலைமை வழக்கறிஞராக ஏ.எல். சோமையாஜி அப்போது நியமிக்கப்பட்டார்.
புதிய தலைமைச் செயலகக் கட்டட விவகாரம் தொடர்பாக பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆஜராகி தமிழக அரசுக்கு ஆதரவாக தீர்ப்பைப் பெற்றுத் தந்த நிலையில் அரசு தலைமை வழக்கறிஞராக சோமையாஜி நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று திடீரென அவர் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இன்று அவர் தமது ராஜினாமா கடிதத்தை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து புதிய தலைமை வழக்கறிஞராக முத்துக்குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.