வழக்கறிஞர்கள் ஹைகோர்ட் முற்றுகை.. சென்னையில் போக்குவரத்து பாதிப்பு.. மக்கள் அவதி
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. மேலும், அவ்வழியே போக்குவரத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டது.
வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களை வாபஸ் பெற வலியுறுத்தி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கறிஞர்கள் போராட்டத்தால் சென்னை பாரிமுனை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உயர்நீதிமன்றம் வெளியே ஆவின் நுழைவுவாயிலில் 1000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக ஊர்வலமாக சென்று வழக்கறிஞர்கள் வழக்கறிஞர் சட்ட விதி திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.
வெறிச்சோடிய சாலை
சென்னையில் இன்று காலை 9 மணிக்கே பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றம் அருகில் வழக்கறிஞர்கள் சாலையின் இருபுறமும் திரண்டனர். இதனால் சுமார் 1 கி.மீ தூரத்துக்கு பூந்தமல்லி நெடுஞ்சாலை போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடியது.
மாற்று வழியில் பேருந்து
இந்த போராட்டத்தின் எதிரொலியாக பாரிமுனைக்கு பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் சென்னையின் பிற பகுதிகளில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக பாரிமுனைக்கு செல்லும் பேருந்துகள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. பேருந்துகள் அங்குள்ள பல் மருத்துவகல்லூரி அருகில் உள்ள சிக்னலில் திருப்பி விடப்பட்டது.
முடங்கிய பேருந்து சேவை
இதனால் பாரிமுனை பேருந்து நிலையத்துக்கு செல்ல வேண்டியவர்கள் அங்கேயே கீழே இறக்கி விடப்பட்டனர். பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் ஐகோர்ட்டை சுற்றியுள்ள சாலைகளில் பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.
எங்கு பார்த்தாலும் வழக்கறிஞர்கள்
கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து சாலையை கடப்பதற்கு போடப்பட்டுள்ள நடைமேடை மற்றும் அப்பகுதி முழுவதும் எங்கு பார்த்தாலும் வழக்கறிஞர்கள் தான் நின்று கொண்டிருந்தனர்.
பாரிமுனைக்கு வழி இல்லை
போராட்டம் காரணமாக அப்பகுதியில் இருந்த பங்கிலும் விற்பனை நடைபெறவில்லை. அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் அமர்ந்திருந்தனர். மேலும், போலீஸ் உயர் அதிகாரிகள் வாகனம் நிறுத்தும் இடமாக அப்பகுதி மாறியிருந்தது. இதனிடையே பொதுமக்கள் பாரிமுனைக்கு செல்வதற்காக, போலீஸார் பெட்ரோல் பங்க் அருகில் சிறிய வழி ஏற்படுத்தி கொடுத்தனர். அதன் வழியாகவே பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்கு சென்றனர்.
ஏராளமான வழக்கறிஞர்கள்
போராட்டத்தில் பங்கேற்க வந்த வழக்கறிஞர்களின் வாகனங்களும், அங்குள்ள பல் மருத்துவ கல்லூரி அருகில் உள்ள சிக்னல் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இதனால், வழக்கறிஞர்கள் அங்கிருந்து ஊர்வலமாக போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு சென்றனர். காலை 8 மணி அளவில் இருந்தே போராட்டத்துக்கு வெளி மாவட்ட வழக்கறிஞர்கள் வரத் தொடங்கி மதியம் 12 மணி வரையில் வந்து கொண்டே இருந்தனர்.
பணிக்கு சென்றோர் பாதிப்பு
பாரிமுனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அலுவலக பணிக்கு சென்றவர்கள் இன்று பெரிதும் அவதிக்குள்ளாகினர். ஏராளமான வழக்கறிஞர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதால், இன்று பாரிமுனை மற்றும் உயர்நீதிமன்றத்தை சுற்றியுள்ள பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
தங்கி இருந்து போராடுவோம்
வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்தை வாபஸ் பெறும் வரை சென்னையை விட்டு செல்லப்போவதில்லை. அதுவரையில் இங்கேயே தங்கி இருந்து போராடப் போராட்டம் நடத்தபோவதாக வெளியூரில் இருந்து வந்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.