பேச அனுமதி மறுப்பு- சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் அமளி!!
சென்னை: சட்டசபையில் திமுக உறுப்பினர் கேபிபி சாமிக்கு பேச அனுமதி கொடுக்கவில்லை எனக் கூறி அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டசபையில் கடந்த வாரம் 2016-17ம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் மீதான விவாதம் நேற்று தொடங்கியது.
சட்டசபையில் 2-வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் இன்றும் நடைபெற்றது. அப்போது சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தம்முடைய கருத்துகளை முன்வைத்தார்.
34 ஒத்திவைப்பு தீர்மானங்கள்..
மு.க.ஸ்டாலின் தம்முடைய பேச்சில், மொத்தம் 34 ஒத்திவைப்பு தீர்மானங்கள் திமுக சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒத்திவைப்பு தீர்மானங்கள் குறித்து விவாதிக்க திமுக உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
விவசாய கடன் தள்ளுபடி
மேட்டூர் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை விவகாரம் குறித்தும் விவாதிக்க வேண்டும். விவசாய கடன் தள்ளுபடி, மத்திய அரசின் கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.
செல்லூர் ராஜு பதில்
அதேபோல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவர் சரவணன் மர்ம மரணம் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்றார் ஸ்டாலின். இதன் பின்னர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்தார்.
அமளி
இதனிடையே திமுக எம்.எல்.ஏ. கேபிபி சாமிக்கு பேச அனுமதிக்க மறுக்கப்பட்டதாக திடீரென சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது. சாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு திமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.