காரசார விவாதம், அமளி, வெளிநடப்பு ஓய்ந்தது... சட்டசபை ஒத்திவைப்பு!
சென்னை: கார சார விவாதங்கள், அமளிகள், வெளிநடப்புகள் என பரபரப்பை கிளப்பிய தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் வாசித்த பட்ஜெட் உரையை திமுக உறுப்பினர்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து 26, 30,31,1 என நான்கு நாட்கள் பட்ஜெட் உரை மீதான விவாதம் நடைபெற்றது.
தேமுதிக எம்.எல்.ஏக்கள்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் தங்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விஜயகாந்த் வருகை
சபை நடவடிக்கையில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த் இம்முறையும் வெறும் கையெழுத்து மட்டுமே போட்டார். கையோடு தர்ணா செய்த தனது கட்சி எம்.எல்.ஏக்களையும் கூட்டிக்கொண்டு சென்றார்.
கவன ஈர்ப்பு தீர்மானங்கள்
நான்கு நாட்கள் நடைபெற்ற கூட்டத் தொடரில் உடன்குடி மின்திட்டம் டெண்டர் ரத்து செய்யப்பட்டது குறித்து எதிர்கட்சிகள் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம் புயலை கிளப்பியது. திருவாரூர் மத்திய பல்கலைக்கழக கட்டிடம் இடிந்தது தொடர்பாக சிறப்பு கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடைபெற்றது.
சட்டசபையில் கொம்பன்
வேலூர் அருகே கலெக்டரின் கார் விபத்தில் இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாகவும் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேலும் நெல்லை வேளாண்மை அதிகாரி முத்துக்குமார் தற்கொலை விவகாரம் தொடர்பாகவும், கொம்பன் பட விவகாரம் தொடர்பாகவும் பேச முற்பட்டதற்கு அனுமதி மறுக்கப்படவே எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
அட காமெடி கூட
காரசாரமாக விவாதங்கள் அனல் பறந்தாலும் கொஞ்சம் காமெடியும் சபையில் அரங்கேறியது. அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பாஸ்கர் நேற்று பேசும் போது, ''சம்சாரம் இல்லாமல் இருந்து விடலாம். ஆனால், மின்சாரம் இல்லாமல், இருக்க முடியாது. அதை உணர்ந்து தான், தடையில்லா மின்சாரம் வழங்க, ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்,'' என்றார்.
இரண்டுமே முக்கியம்
உடனே, அமைச்சர் கோகுல இந்திரா எழுந்து, ''பாஸ்கர் பேசியதில் ஒரு திருத்தம். அவர் பேசியதை, வாழ்க்கைக்கு சம்சாரம் எப்படி முக்கியமோ, அதேபோல் மின்சாரம் முக்கியம் என, மாற்றிக் கொள்ளுங்கள்,'' என்றார். அப்போது, சபாநாயகர் இருக்கையில் இருந்த, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ''இரண்டும் இருக்கட்டும்,'' எனக் கூற, சபையில் சிரிப்பலை எழுந்தது.
கடைசி முழு பட்ஜெட்
அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தாக்கல் செய்த இறுதியான முழு பட்ஜெட் இதுவாகும். இது முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த முதல் பட்ஜெட் என்பதால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. தேர்தலை எதிர்கொள்ள இருப்பதால் வரியில்லாத பட்ஜெட்டை அம்மா வழிகாட்டுதல்படி தாக்கல் செய்தார்.
ஒத்திவைப்பு
பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் நான்கு நாட்கள் விவாதம் நடைபெற்றதை அடுத்து இன்று தேதி குறிப்பிடப்படாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் எப்போது தொடங்கும் என்று பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.