சட்டசபையில் நடந்தது என்ன? - ஆளுநருக்கு அறிக்கை அளித்தார் ஜமாலுதீன்
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த சம்பவங்கள் மற்றும் வாக்கெடுப்பு நடந்த விதம் குறித்து ஆளுநர் மாளிகையில் சட்டசபை செயலர் ஜமாலுதீன் இன்று அறிக்கை தாக்கல் செய்தார்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டசபையில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கையை சட்டசபை செயலாளர் ஜமாலுதீன், ஆளுநர் மாளிகையில் நேரில் வழங்கினார்.
ஆளுநரிடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முறையிட்டதைத் தொடர்ந்து, சட்டசபை நிகழ்வு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆளுநர் வித்யாசாகர் ராவ் சட்டப்பேரவை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து இன்று காலை சபாநாயகர் தனபால், சட்டசபை செயலாளருடன் ஆலோசனை நடத்தி அறிக்கை தயாரித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என வலியுறுத்தி திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
வாக்கெடுப்பில் வெற்றி
சபாநாயகரை சில எம்எல்ஏக்கள் பிடித்து தள்ளினர். சபாநாயகர் இருக்கையிலும் இருவர் அமர்ந்தனர். இதைத் தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 122 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபித்தார்.
ஆளுநரிடம் புகார்
இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் தமிழக ஆளுநரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனர். அப்போது சட்டசபையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ளக் கூடாது என வலியுறுத்தினர். இதுபோல் நாடாளுமன்ற திமுக உறுப்பினர்களும் ஆளுநரை சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து புகார் அளித்தனர்.
ஸ்டாலின் தாக்கப்பட்டதாக புகார்
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுகவினர் தாக்கப்பட்டதாக ஆளுநரிடம் ஸ்டாலினும் புகார் அளித்திருந்தார். புகார்களைத் தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டசபையில் நடந்த சம்பவங்கள் குறித்து அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு பேரவைச் செயலர் ஜமாலுதீனை, ஆளுநர் வித்யாசாகர் ராவ் கேட்டுக்கொண்டார்.
வீடியோ காட்சிகளுடன் விளக்கம்
இதனையடுத்து இன்று சபாநாயகர் தனபால் சட்டசபை செயலர் ஜமாலுதீனுடன் இணைந்து அறிக்கை தயாரித்தார். அந்த அறிக்கையை இன்று ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று அறிக்கையை வழங்கினார். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் குறித்து அறிக்கையில் ஜமாலுதீன் விளக்கம் அளித்துள்ளார் என்று தெரிகிறது. சட்டப்பேரவை விடியோ காட்சிகளும் ஆளுநர் மாளிகையில் வழங்கப்பட்டன.
எடப்பாடி பழனிச்சாமியின் நிலை
ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பை சென்றுள்ளார். இந்த அறிக்கையை படித்து பார்த்த பின்னரே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபித்திருப்பதை ஏற்பதா அல்லது வேண்டாமா என்பதை ஆளுநர் முடிவு செய்வார் என்று ராஜ்பவன் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.