பரபரப்பான அரசியல் சூழலில் வரும் 18-ல் சென்னை வருகிறார் ஆளுநர்
பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் வரும் திங்கள்கிழமை சென்னை வருகிறார்.
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் வரும் திங்கள்கிழமை சென்னை வருகிறார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார்.
முதல்வருக்கு எதிராக ஆளுநரை சந்தித்து ஆதரவை டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றனர். இதற்கு விளக்கம் கோரி சபாநாயகர் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
பதில் அளிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை கோரி தினகரன் எம்எல்ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கேட்டுக் கொண்டதற்கிணங்க சபாநாயகரின் கருத்தை தெரிவிக்க அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜரானார். அப்போது அவர் கூறுகையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.
ஆளுநர் வித்யாசாகர் ராவ் வரும் 18-ஆம் தேதி சென்னை வருகிறார் என்றார். குட்கா விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்களையும், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கவும் சபாநாயகர் திட்டமிட்டுள்ளதாக ஸ்டாலின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது வரும் 20-ஆம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ள நிலையில் வரும் 18-ஆம் தேதி ஆளுநரின் சென்னை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.