அதிமுகவிற்குள் ஸ்ட்ரா போட்டு உரியத் தொடங்கியுள்ள பாஜக.. எப்படித்தெரியுமா?
அதிமுகவின் இரு தரப்பு அக்கப்போர்களால் விரக்தியடைந்திருக்கும் கட்சியின் அதிருப்தியாளர்களை இழுக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.
சென்னை : அதிமுகவில் மூன்றாக ஏற்பட்டிருக்கும் பிளவை பயன்படுத்தி அதிருப்தியாளர்களை பாஜகவில் இணைக்கும் பணியில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த 30 ஆண்டுகளாக அந்தக் கட்சியை கட்டுக் கோப்புடன் வழி நடத்திச் சென்றார். அவர் உயிரோடு இருந்த வரை அடக்கி வாசித்தவர்கள் ஜெயலலிதா மறைவுக்குப் பின் கட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றனர். இதனால் ஏற்பட்ட அடுத்தடுத்த திருப்பங்களால் தற்போது அதிமுக மூன்றாக பிளவு பட்டுள்ளது.
அதிமுகவின் இந்த குழப்பத்திற்கு பாஜகவின் செயல்பாடுகளும், பின்கதவு அரசியலுமே காரணம் என தமிழக அரசியல் கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக செயல்பாடுகளால் விரக்தி அடைந்திருக்கும், அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகிகளை இழுக்கும் முயற்சியில், பா.ஜ.க இறங்கியுள்ளது.
காவி ஆட்சி
பாஜக தலைவராக அமித்ஷா பொறுப்பேற்றதும் அவருக்கு கொடுக்கப்பட்ட முதல் அசைன்மென்ட்டே நாடு முழுவதும் பாஜக ஆட்சியை மலரச் செய்ய வேண்டும் என்பதே தானாம். இதன் முன்னோட்டமாக பஞ்சாப், மணிப்பர், கோவா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல் பார்க்கப்பட்டது. இதில் உத்தரப்பிரதேசத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியும் மற்ற 3 மாநிலங்களில் இதர கட்சிகளின் ஆதரவுடனும் ஆட்சி அமைத்துள்ளது.
பலவீன வேலை
மற்ற மாநிலங்களில் முயன்று பாஜக ஆட்சி அமைத்தாலும் தமிழகத்தில் மாநில கட்சிகளான திமுக, அதிமுகவை வீழ்த்தி காலூன்றவே முடியவில்லை. இந்த சமயத்தில் ஜெயலலிதா மரணம் அடைய காரியத்தை சாதகமாக்கிக் கொண்டு அதிமுகவை பலவீனப்படுத்தும் செயலில் பாஜக உள்ளடி வேலை பார்த்து வருவதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் முடியவில்லை
கடந்த, 2016 சட்டசபை தேர்தல் முடிந்ததும், பா.ஜ.க தலைமை முக்கிய முடிவெடுத்தது. பிரதமர் மோடி, கட்சி தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் பிரசாரம் செய்தும், ஒரு இடத்தில் கூட, பா.ஜ.க வெற்றி பெறவில்லை. எனவே, கிராமங்களில் கட்சியை வலுப்படுத்த, தேசிய தலைவர் அமித் ஷா உத்தரவிட்டார். அதிமுகவில் நீண்டகாலமாக இருந்தும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள், தலைமையால் ஒதுக்கப்பட்டவர்கள் பட்டியலை தயாரித்து, அவர்களை கட்சியில் சேர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டது.
பதவியாசை காட்டும் பாஜக
இதன்முற்கட்டமாக அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, பவானி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன், மத்திய இணையமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் பதவிச் சண்டையால் அதிமுகவினர் பலர் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர்களை பாஜகவில் இணைப்பதோடு உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் வாய்ப்பளிக்கப்படும் என்ற ஆசையையும் ஏற்படுத்தி வருகிறதாம் பாஜக.