தமிழகம் முழுவதும் 100 பேருந்துகள் மீது கல்வீச்சு… 250 போக்குவரத்து ஊழியர்கள் கைது
சென்னை: போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கல்வீச்சு சம்பவங்கள் தொடர்பாக, தமிழகம் முழுவதும் 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யவர்களை விடுவிக்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்போவதாக போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 22 கோரிக்கைகளை முன் வைத்து டிசம்பர் 29 ஆம் தேதி (இன்று) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அண்ணா போக்குவரத்துக்கழக சங்க ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடவில்லை. அவர்களும், தற்காலிக ஊழியர்களும் பேருந்துகளை இயக்குகின்றனர். மாநிலம் முழுவதும் 30 சதவிகித பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்கப்படும் பேருந்துகள் மீது கல்வீசி தாக்கப்படுகின்றன.
சென்னையில் நேற்று மட்டும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் 221 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று போராட்டம் நடத்திய 94 போக்குவரத்து தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரியில் 10 அரசுப் பேருந்துகள் தாக்குதலுக்கு உள்ளாகின. திருவண்ணாமலையில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். கும்பகோணத்தில் வெவ்வேறு பகுதிகளில் 4 பேருந்துகளின் கண்ணாடிகள் அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டன.
சிவகங்கையில் பேருந்துகள் மீது கல்வீசி கண்ணாடிகளை உடைத்த 2 நடத்துனர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல்லில் அரசுப் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே அடக்குமுறையை கையாண்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக போக்குவரத்துத்துறை ஊழியர்கள் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்காவிட்டால் 25000 பேர்வரை சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.