மே 5 முதல் "பூத் சிலிப்" வழங்கப்படும் - ராஜேஷ் லக்கானி தகவல்
சென்னை: சட்டசபை தேர்தலில் பட்டியலில் பெயர் உள்ள வாக்காளர்களுக்கு வரும் 5-ஆம் தேதி முதல் "பூத்-சிலிப்' வழங்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளை கண்காணிக்க 124 பார்வையாளர்கள் ஏற்கெனவே பணியாற்றி வருகின்றனர். அவர்களுடன் கூடுதலாக 42 பார்வையாளர்கள் வந்துள்ளனர்.
சட்டசபை தேர்தலில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 58 ஆயிரத்து 761 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு "பூத்-சிலிப்'கள் வீடு-வீடாக வழங்கப்படும். இந்தப் பணி வரும் 5-ஆம் தேதி தொடங்கும்.
தேர்தலில் போட்டியிடும் வாக்காளர்கள் தங்களது செலவுக் கணக்குகளை மூன்று நாள்களுக்கு ஒருமுறை தாக்கல் செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 97 சதவீத அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டுக்கான சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
வாக்குப் பதிவின் போது ஆண், பெண்களுக்கு தனி வரிசை உருவாக்கப்படும். நடிகர்-நடிகைகள் போன்ற பிரபலங்களுக்கு தனி வரிசை ஏதும் கிடையாது. மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு வரிசை ஏதுமில்லை. அவர்கள் நேராகச் சென்று தங்களது வாக்குகளைச் செலுத்தலாம்.
சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளன. உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட வகையில் ரூ.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், வருமான வரித் துறையினர் பிடித்த தொகை ரூ.24 கோடியாகும் என்றார் ராஜேஷ் லக்கானி.