அய்யாகண்ணுவுக்கும், அப்சல் குரு குழுவுக்கும் என்ன தொடர்பு.. முதல்வரிடம் விளக்கம் கேட்கும் ஹெச். ராஜா
அய்யாகண்ணுவுக்கும், பயங்கரவாதி அப்சல் குருவின் குழுவுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பது குறித்து முதல்வர் விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜகவின் ஹெச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி: தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாகண்ணுவுக்கும், பயங்கரவாதி அப்சல் குருவின் குழுவுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பது குறித்து முதல்வர் விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வறட்சி நிவாரணம், விவசாயிகளின் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 41 நாள்களாக டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்டைய மாநிலத்தவரையும் பதைபதைக்க வைக்கும் போராட்டங்களை நடத்திய மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை என்பதால் தமிழக மக்கள் மிகவும் கொதிப்பில் உள்ளனர்.
அனைத்து கட்சி கூட்டம்
இந்நிலையில் திமுக சார்பில் அனைத்து கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்துவது, குடிநீர் பிரச்சினை தீர்க்க கோருவது, மதுவிலக்கு, நீட் தேர்வில் விலக்கு ஆகியவற்றை வலியுறுத்தி 25-ஆம் தேதி அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டன. இதில் அய்யாகண்ணுவும் அவரது குழுவினரும் கலந்து கொள்ள வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
முதல்வர் சந்திப்பு
இதைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் விவசாயிகளை சந்தித்து கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரிம் பேசுவதாகவும், போராட்டத்தை கைவிடுமாறும் கூறினார். இதையேற்று விவசாயிகள் தமிழகம் சென்றனர்.
தூண்டுதலின் பேரில் போராட்டம்
போராட்டம் தொடங்கியதிலிருந்தே தமிழிசை சௌந்தரராஜனும், ஹெச்.ராஜாவும் விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியே பேசிவந்தனர். அய்யாகண்ணு போராட்டத்தை தமிழகத்தில் நடத்தாமல் டெல்லியில் நடத்துவது ஏன் என்றும் இது யாரோ தூண்டுதலின் பேரில் அவர் இவ்வாறு செயல்படுவதாகவும் தமிழிசை கூறினார்.
பயங்கரவாதிகள் புகழிடம்
அய்யாகண்ணுவுக்கு 100 ஏக்கர் நிலமும், ஆடி காரும் வைத்துள்ளார் என்று அவர் மீது ஹெச். ராஜா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார். இந்நிலையில் தற்போது தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, தமிழகம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளது என்றார்.
விசாரணை நடத்துங்கள்
அய்யாகண்ணுவுக்கும், நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட அப்சல் குரு குருவுக்கும் என்ன தொடர்பு என்பதை முதல்வர் அவரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி சர்ச்சையை தேடிக் கொண்டுள்ளார் ஹெச். ராஜா.