பச்சை சேலை, பச்சைக் கல் மோதிரம், பச்சை நிறப் பேனா .. பதவியேற்பில் ஜொலித்த ஜெ. சென்டிமெண்ட்!
சென்னை: 5வது முறையாக தமிழக முதல்வராக இன்று மீண்டும் பதவியேற்ற ஜெயலலிதா தன்னுடைய ஜோதிட நம்பிக்கைகளின் அடிப்படையில் மீண்டும் சனிக்கிழமையிலேயே பதவியேற்றுள்ளார்.
முன்னதாக போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து ராகுகாலம் முடிந்து புறப்பட்ட ஜெயலலிதா, பிள்ளையாரை வணங்கி பதவியேற்பு விழா அரங்கிற்கு சென்றடைந்தார்.
பச்சைக் கலர் ராசி என்பதாலோ என்னவோ, பூக்கள் போடாத பச்சை நிறப் புடவையையே அணிந்திருந்தார். அவருடைய தோழியான சசிகலாவும் அவர் அணிந்திருந்தது போலவே பச்சைக் கலர் புடவையில் ஆனால், பூக்கள் போட்டு அணிந்திருந்தார்.
பதவிப்பிரமாணம் முடிந்ததும் பச்சை நிறக் கலருடைய பேனாவினை உபயோகித்து பதவிக்கான உத்தரவில் கையெழுத்திட்டார் ஜெயலலிதா.
எப்போதும் கையில் வாட்ச் மட்டுமே அணிந்து சிம்பிளாக வலம் வரும் ஜெயலலிதா இன்று மட்டும் வலது கையில் பச்சைக் கல் பதித்த மோதிரம் ஒன்றினை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.