சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு ஜெ. இரங்கல்: தூதரக புத்தகத்தில் பதிவு
சென்னை: சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு தமிழக அரசு இரங்கலை தூதரக புத்தகத்தில் பதிவு செய்ய ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் இரண்டு முறை அதிபராக இருந்த எஸ்.ஆர். நாதன் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 31-7-2016 அன்று சிங்கப்பூர் அரசு மருத்துவமனையில் எஸ்.ஆர்.நாதன் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி 22-8-2016 அன்றிரவு காலமானார். எஸ்.ஆர்.நாதனின் உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சிங்கப்பூர் நாட்டின் தேசிய கொடியால் மூடப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக பாராளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள எஸ்.ஆர்.நாதனின் உடலுக்கு ஆயிரக்கணக்கான தலைவர்களும், பொதுமக்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முன்னாள் அதிபருக்கான இறுதி மரியாதை சடங்குகள் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் உள்ள பல்கலைக்கழக கலாச்சார மையத்தில் நடைபெறும். இறுதி மரியாதையில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் உள்பட பலர் அஞ்சலி உரையாற்றுகிறார்கள். மாலை சுமார் 5 மணியளவில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
இதனிடையே எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு தமிழக அரசு இரங்கலை தூதரக புத்தகத்தில் பதிவு செய்ய ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
22.08.2016 அன்று இயற்கை எய்திய சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் இரங்கல் தெரிவிக்கும் வகையில், சிங்கப்பூர் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் புத்தகத்தில் கீழ்க்கண்ட இரங்கல் செய்தியை பதிவு செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 22.8.16 அன்று சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு தமிழக அரசு ஆழ்ந்த வேதனையும், இரங்கலும் தெரிவிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இதயம் தோய்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
அதன்படி தமிழக அரசின் சார்பில் மேற்கண்ட இரங்கல் செய்தி, இரங்கல் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.