"கேரளத்து" கமல்ஹாசனுக்கு "தமிழக" முதல்வர் வாழ்த்துச் சொல்லாதது சரிதானோ?
சென்னை: நடிகர் கமல்ஹாசன் தம்மை மலையாளியாக எப்போதும் வெளிப்படுத்திவருவதாலோ என்னவோ செவாலியே விருது பெற்றதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவிக்காமல் இருந்துவிட்டார் போல...
செவாலியே விருது பெற்ற கமல்ஹாசனுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவிக்கின்றனர்... தென்னிந்திய திரை உலகம் கொண்டாடி வருகிறது...
கேரளா முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு நன்றி கடிதம் அனுப்பிய கமலோ, பினராயி விஜயன் என் மாநில முதல்வர் என கூறியதுடன் நான் யார் என்பதை சினிமா பார்க்கும் மலையாளிகளிடம் கேளுங்கள் எனவும் தெரிவித்திருக்கிறார்.
என்னுடைய மாநில முதல்வர் பினராயி விஜயன்; நான் மலையாளி என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது இக்கடிதம்.. இது பரபரப்பையும் சர்ச்சையையும் விவாதத்தையும் உருவாக்கி இருக்கிறது.
அதே நேரத்தில் கமல்ஹாசன் இதற்கு முன்னரும் 'கேரளா' பாசத்துடனேயே பல்வேறு நிகழ்ச்சிகளில் தம்மை ஒரு மலையாளியாக வெளிப்படுத்தியதும் உண்டு.
ஒருவேளை கமல் தம்மை இப்படி 'கேரளா' மாநிலத்தவராக வெளிப்படுத்திவருவதால்தான் "தமிழகத்துக்கு" முதல்வர் ஜெயலலிதா அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லையோ? என்ற கேள்வி எழுகிறது.
அதுவும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதற்கு எதிராக தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் கமல்ஹாசன் இப்படி ஒரு உணர்வை வெளிப்படுத்தியதிருப்பது அதிருப்தியையே உருவாக்கியுள்ளது.