விடாது கருப்பாய் தொடரும் தற்கொலை வழக்கு: சி.பி.ஐ.வசம் சிக்குவாரோ 'தம்பி'? திகிலில் ஓ.பி.எஸ்!!
மதுரை: தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ள துறைசார்ந்த அமைச்சர்கள் எங்கே முன்னாள் அமைச்சர் 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தியை போல தாங்களும் சிக்கி சிறைக்கு போக நேரிடுமோ என மடியில் நெருப்பை கட்டிக் கொண்டு வலம் வருகின்றனர்... அமைச்சர்கள் இப்படி என்றால் முதல் அமைச்சரான ஓ. பன்னீர்செல்வமோ, தலித் சமூக இளளஞர் தற்கொலை வழக்கில் எங்கே சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டு தமது தம்பி ராஜா சிக்கி ஜெயிலுக்குப் போக நேரிடுமோ என கலக்கத்தில் இருக்கிறாராம்...
திருநெல்வேலியைச் சேர்ந்த வேளாண் பொறியாளர் முத்துகுமாரசாமி தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்ததாக வேளாண்துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி டிஸ்மிஸ் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கிறார்.. இதேபோல் அடுத்தடுத்து அமைச்சர்களின் நெருக்கடிகளால் அரசு அதிகாரிகள் தற்கொலைகள் தொடர்கின்றன...
அரசியல் கட்சிகளோ ஒவ்வொரு தற்கொலையையும் கையில் எடுத்துக் கொண்டு ஆளும் அண்ணா தி.மு.க. அரசுக்கு எதிராக போர்க்கொடி பிடித்து வருகின்றன... இந்த நெருக்கடி அமைச்சர்களுக்கெல்லாம் தலைமை அமைச்சரான ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இருக்கிறது.. வேறு வகையில்...
என்னதான் முதல்வர் பதவியில் இருந்தாலும் தம்மை 'அமைச்சராக' மட்டுமே கருதிக் கொண்டிருக்கும் ஓ.பி.எஸ். சாந்தசொரூபியாக தோற்றமளிப்பவர்தான்.. ஆனால் வந்திருக்கும் வினை அவரது தம்பி ராஜாவால்...
இதுதான் பிரச்சனை
தேனி மாவட்டம் கல்லுப்பட்டியில் தலித் இளைஞர் நாகமுத்து, அங்கிருந்த கைலாசநாதர் கோயிலை தூய்மைப்படுத்தி பரமாரித்து வந்தார். இதைப் பொறுக்க முடியாத ஆதிக்க ஜாதியினர், நாகமுத்துவிடம் இருந்து கோயில் நிர்வாகத்தை பறித்து தங்கள் வசமாக்கி குடமுழுக்கு நடத்தினர்.. இதுதான் பிரச்சனையின் அடிப்படை.. சரி இதில் எங்கே ராஜா வருகிறார்..?
பெரியகுளம் போலீசில் நாகமுத்து ஒரு புகார் தருகிறார்.. அதில். என்னை ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவும் அவருடைய கூட்டாளிகளான கல்லுப்பட்டி ஊராட்சித் தலைவர் வி.எம்.பாண்டி, மணிமாறன், ஞானம், லோகு, சிவகுமார், சரவணன் ஆகியோர் கொன்றுவிடுவதாக மிரட்டி, தாக்கினார்கள். என் ஜாதியைச் சொல்லி இழிவுபடுத்தினார்கள். என் குடும்பத்தினரையும் கொல்லப்போவதாக மிரட்டுகிறார்கள் என கூறியிருந்தார்.. இந்த புகாரை அதெப்படி போலீஸ் எளிதாக வாங்கிவிடுமாம்?
நீதிமன்ற படிகள்...
வேறுவழியின்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை நாடி தமக்கும் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு தருமாறு கேட்டார் நாகமுத்து. இதனால் ஆத்திரமடைந்த எதிர்த்தரப்பு நாகமுத்து மீது மேலும் கோபத்தைக் காட்டியது
தற்கொலை .. கடிதம்
இதில் அலறிப் போன அவர், பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ. ராஜா உட்பட 7 பேர்தான் என் சாவுக்குக் காரணம் என கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் விவகாரம் வெடித்தது. வேறுவழியில்லாமல் ஓ.பி.எஸ். தம்பி ராஜா உள்ளிட்ட 7 பேர் மீதும் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதோடு இந்த வழக்கு சரி...
விடாத கருப்பு..
ஆனாலும் ஓய்ந்துவிடாத நாகமுத்து குடும்பத்தினர் மீண்டும் நீதிமன்றத்துக்குப் போய் சி.பி.ஐ. விசாரணை கேட்டனர்... அலறிப் போன தமிழக காவல்துறையோ, ஜூன் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிடுவோம் என்ற ஜகா வாங்கியிருக்கிறது..
சமாதானப் படலம்..
இந்த வழக்கை எவிடென்ஸ் அமைப்பு தற்போது கையில் எடுத்திருக்கிறது.. பல்வேறு மனித உரிமை மீறல் வழக்குகளை கையாண்டு வரும் எவிடென்ஸ் அமைப்பு வசம் இந்த வழக்கு சென்றிருப்பதால் முதல்வர் பன்னீர்செல்வம் ரொம்பவே அப்செட்டாகிவிட்டாராம்.. இதனால் எப்படியாவது நாகமுத்து குடும்பத்தை சமாதானப்படுத்துவதற்கு அனைத்துவிதமான வழிகளையும் முயற்சித்துக் கொண்டிருக்கிறாராம்... ஒரு சின்ன வழி கிடைத்தாலும் அதனையும் விட்டுவிடாமல் பேரம், சமாதானம் என அனைத்தும் அரங்கேறிக் கொண்டிருக்கிறதாம்..
எவிடென்ஸ் உறுதி
ஆனால் இந்த வழக்கை நடத்தி வரும் எவிடென்ஸ் கதிரோ, பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவுக்கு நிச்சயம் 10 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை கிடைக்கும்... அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன... அவர் முதலில் முன் ஜாமீன் கோரினார்.. பின்னர் நாகமுத்துவின் கடிதமே இல்லை என்றார்கள்... ஆனால் தூக்கிலிட்டு இறந்து போன நாகமுத்துவின் கடிதமே என நிரூபித்தோம்.. இப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இழுத்தடிக்கிறார்கள்... அவர்கள் என்ன செய்தாலும் தப்பவே முடியாது என்கிறார் கதிர்.
நிச்சயம் சிறை..
நாகமுத்து வழக்கு போகிற போக்கைப் பார்த்தால் நிச்சயம் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஜெயிலுக்குப் போவதை யாரும் தடுக்க முடியாது என்றுதான் கூறுகின்றன மதுரை வட்டாரங்கள்....இந்த வழக்கால் கட்சியில் தமக்கு ஏதேனும் நெருக்கடி வந்துவிடுமோ என்ற பீதியிலும் இருக்கிறதாம் முதல்வர் ஓ.பி.எஸ்.தரப்பு..
அதுசரி உப்பை தின்றால் தண்ணீர் குடித்தாகவேண்டுமே!