பிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படை மீது வழக்கு.... டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி!
தமிழக மீனவர் பிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படை மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக கடலோர காவல்படை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.
சென்னை: தமிழக எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் பிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக கடலோர காவல்படை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.
300 படகுகளில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 6-ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்திய கடல் எல்லையான ஆதம்பாலம் என்ற பகுதியில் அந்த மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த சிங்கள கடற்படை, மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்ஜோ (22) என்ற மீனவருக்கு கழுத்தில் குண்டு பாய்ந்தது.
ஆபத்தான நிலையில் கரைக்குத் திரும்பிய போது அவர் உயிரிழந்தார். மற்றொரு மீனவரான சரோன் காயமடைந்தார். தமிழகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பிரிட்ஜோவை சுட்ட இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் போராடி வந்தனர். இந்நிலையில் மீனவர் பிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை துறைமுகத்தில் தமிழக கடலோர காவல் படை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.