மக்களவையில் 25 எம்.பிக்கள் சஸ்பெண்ட்... சென்னையில் இன்று காங். கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை : மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக சென்னையில் இன்று (புதன்கிழமை) காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் நடைபெறுகிறது.
இது குறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஐ.பி.எல். முன்னாள் ஆணையர் லலித் மோடி தொடர்பான முறைகேடுகளில் குற்றம் சாட்டப்பட்ட வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே மற்றும் மத்திய பிரதேச மாநில தேர்வு வாரிய வியாபம் ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை எழுப்பிப் போராடி வருகிறார்கள்.
மக்கள் விரோத மத்திய மாநில அரசுகளை கண்டித்து காலை 10 மணிக்கு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் #AntiDemocraticBJP_ADMK pic.twitter.com/dd0k5epcCm
— EVKS Elangovan (@EVKSElangovan) August 4, 2015
நீதிக்காக போராடி வந்த 25 மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து சபாநாயகர் அறிவித்துள்ளார். ஊழலை மூடிமறைக்கும் பா.ஜ.க.வையும் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி அறவழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் நிகழ்த்திய கொலைவெறித் தாக்குதலையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மத்திய, மாநில அரசுகளின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் தலைமையில் சத்தியமூர்த்தி பவனிலிருந்து ஊர்வலமாகச் சென்று அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு 5.8.2015 புதன்கிழமை காலை 10 மணியளவில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.