ஆட்டையாம்பாட்டிகாரங்க குசும்பைப் பாத்தீங்களா பாஸு...!
திருமண பேனர்களை வித்தியாசமாக அடித்து பட்டைய கிளப்பியிருக்கிறார்கள் நம்ப ஆட்டையாம்பட்டிக் காரங்க என்னன்னு கீழே படிச்சு தெரிஞ்சுக்கோங்க.
சேலம் : திருமண பந்தத்தில் இணைபவர்கள் தங்களது திருமண பத்திரிக்கை, பேனர் என்று எதிலாவது புதுமையை காட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதை வழக்கமாக வைத்துள்ள நிலையில் ஆட்டையாம்பட்டியில் திருமணத்திற்காக ஒரு வித்தியாசமான பேனர் வைக்கப்பட்டுள்ளது.
கலியுக காலத்தில் அனைத்தையும் அனுபவித்து வாழ வேண்டும் என்பதை புரிந்து வைத்திருக்கிறார்கள் இளம் தலைமுறையினர். அவர்களுக்கேற்ப வசதி வாய்ப்புகளும் தொழில்நுட்பமும் கை கொடுப்பதால் அப்படியே கற்பனைக் குதிரையை தட்டி விட்டு எங்கும் புதுமை எதிலும் புதுமை என்று அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளையும் சிறப்பானதாக மாற்றி வருகின்றனர்.
ஆதார் அட்டை போன்று பத்திரிக்கை அடிப்பது, டிஜிட்டல் பத்திரிக்கை, பத்திரிக்கையை திறக்கும் போது மணமக்கள் வரவேற்பது என்று திருமண அழைப்பிற்காக செய்யப்படும் மெனக்கெடுகள் படு ஜோரு. இதே போல சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் ஒரு வித்தியாசமான திருமண பேனர் வைக்கப்பட்டுள்ளது.
ஆட்டையாம்பட்டியில் பரபரப்பு, மாணவர் கைது என்று ஆரம்பிக்கிறது பேனர். லைப்புக்கு சம்பந்தமே இல்லாமல் சைடுல ஒரு பொண்ணு கழுத்துல மாலையோட போஸ் கொடுக்குது. என்னடா இது புதுசா இருக்குனு உள்ள போய் பார்த்தா தான் தெரியுது, .. இது கல்யாண வரவேற்பு பேனராம்!
என்னா தினுசா யோசிக்கிறாங்கப்பா. கைது செய்பவர் மாப்பிளையாம், கைது ஆனவர் மணப்பெண்ணாம். என்னா குத்தம் தெரியுமா ... பெண்ணின் மனதை திருடியது, இதற்கு தண்டனை மூன்று முடிச்சு!.
இந்த "குற்றத்துக்கு" சாட்சி வேற உண்டாம்... அதாங்க அம்மா, அப்பா மற்றும் நண்பர்கள். இப்படி ஒரு பேனரை வெச்சது ஆட்டையாம்பட்டி ஊர்ப்பொதுமக்கள். நல்லா தான் யோசிக்கிறாங்க, ஆனா கல்யாணத்துக்கு போறவங்களுக்கு களி போடுவாங்களா என்னங்கிறத சொல்ல மறந்துட்டாங்கப்போவ்!