எதிர்ப்பையும் மீறி ஆந்திரா கட்டிய புல்லூர் தடுப்பணையில் குதித்து தமிழக விவசாயி தற்கொலை
வேலூர்: ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே புல்லூரில் உயர்த்திக் கட்டியுள்ள தடுப்பணையில் குதித்து தமிழக விவசாயி சீனு என்பவார் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திர மாநில எல்லையில், பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புல்லூர் தடுப்பணையின் உயரத்தை ஆந்திர மாநில அரசு உயர்த்தி உள்ளது. இதனால் தமிழகத்தில் விவசாயம் பாதிக்கப்படும் என்பதால், தமிழக விவசாயிகள், பொது மக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனாலும் அதை சற்றும் கண்டு கொள்ளாமல் தமிழக விவசாயிகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் ஆந்திர அரசு தடுப்பணையைக் கட்டி முடித்தது. பாலாற்றின் குறுக்கே ஆந்திரா புல்லூரில் உயர்த்திக் கட்டியுள்ள தடுப்பணை தற்போது நிரம்பியுள்ளது. 12 அடி உயர புல்லூர் தடுப்பணை நிரம்பியுள்ளதால் ஆந்திர விவசாயிகள் ஆடு வெட்டி கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்தத் தடுப்பணையில் குதித்து தமிழக விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பணையில் குதித்த சீனு ஆணை அருகே உள்ள பள்ளத்தூரை சேர்ந்தவராவார். தடுப்பணை உயரத்தை ஆந்திர அரசு உயர்த்தியதால் பள்ளத்தூருக்கு நீர் வரவில்லை. புல்லூர் அணை நிரம்பியும் தமது அணைக்கு நீர் வராததால் சீனு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நண்பர்கள் முன்னிலையில் தற்கொலை செய்து கொண்ட சீனுவின் உடலை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.