டெல்லியில் தமிழக விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்.. நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன அன்புமணி!
மண்டை ஓடு, மண்சட்டியுடன் டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி: வறட்சி நிவாரண நிதியை உடனடியாக வழங்கக்கோரி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தரில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை தர்மபுரி எம்.பியும், பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயில் டெல்லி ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது மேல்சட்டை அணியாமல் அரைநிர்வாணத்துடன் கைகளில் மண்டை ஓடு மற்றும் மண்சட்டியை ஏந்தியபடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர். இந்தப் போராட்டத்தில் பெண்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தநிலையில் தர்மபுரி எம்.பி. அன்புமணி ராமதாஸ், ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்திற்கு நேரடியாக சென்று அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுடன் சேர்ந்து அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற போராடுவதாகவும், மத்திய அரசிடம் அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.