கூடங்குளத்தில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 562 மெகாவாட் மின் வினியோகம்
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 562 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதாக தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,
அனல் மின் நிலையம், புனல் மின் நிலையம், கியாஸ் மின் நிலையம், காற்றாலைகள் மற்றும் மத்திய தொகுப்பில் இருந்து தமிழக மக்களின் பயன்பாட்டிற்கு மின்சாரம் பெறப்படுகிறது. இதில் காற்றாலைகள் மற்றும் புனல் மின் நிலையத்தில் குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படும்.
அதே சமயம் அனல் மின் நிலையம் மற்றும் அணு மின் நிலையம் ஆகியவற்றில் ஆண்டு முழுவதும் மின் உற்பத்தி நடைபெறும். தற்போது குளிர்காலம் என்பதால் மின்தேவை சற்று குறைந்துள்ளது. இதனால் தேவை மற்றும் உற்பத்திக்கு இடையேயான வேறுபாடும் குறைந்துள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து தமிழகத்திற்கு கடந்த 8ம் தேதி முதல் நேற்று வரை தினமும் 562 மெகாவாட் மின்சாரம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் கூடங்குளத்தில் இருந்து 2 ஆயிரத்து 248 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டுள்ளது. இதனால் மத்திய மின்தொகுப்பில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு 3 ஆயிரத்து 395 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.
காற்றாலைகளில் தற்போது 2 இலக்க எண்களில் தான் மின்சாரம் உற்பத்தியாகுகிறது. இதை கூடங்குளத்தில் இருந்து கிடைக்கும் மின்சாரம் தான் ஓரளவுக்கு ஈடு செய்கிறது என்றனர்.