பேரறிவாளன் பரோல் நீட்டிப்பு?... தீவிரமாக பரிசீலிக்கும் தமிழக அரசு!
பேரறிவாளனின் பரோலை நீட்டிப்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
சென்னை: பேரறிவாளனின் ஒரு மாத கால பரோல் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அதனை நீட்டிக்கக் கோரி அற்புதம்மாள் விடுத்த கோரிக்கை குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் பல ஆண்டுகள் கோரிக்கைக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி பரோலில் விடப்பட்டார். ஒரு மாத விடுமுறையில் ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டில் கடுமையான நிபந்தனைகளுடன் வீட்டில் உள்ளார். பேரறிவாளன் பரோல் விடுமுறையில் இருந்தாலும் அவருடைய வீட்டை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே பேரறிவாளன் வருகையால் அவரது தந்தை மருத்துவ பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பதாகவும் மேலும் ஒரு மாதத்திற்கு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்றும் அற்புதம்மாள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கை குறித்து அரசு பரிசீலித்து வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பேரறிவாளனின் பரோல் நாளை மறுதினம் முடிவடையும் நிலையில், பரோல் நீட்டிப்பு குறித்து அரசு எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பை வெளியிடும் என்று தெரிகிறது. தங்களுக்கு சாதகமான முடிவை அரசு எடுக்குமா என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் பேரறிவாளனும் அவரது குடும்பத்தினரும்.