உள்ளாட்சி தனி அதிகாரிகள் பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு... சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்!
உள்ளாட்சி அமைப்புகளின் உள்ள தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை 2வது முறையாக நீட்டிப்பு செய்து சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. எனவே, புதிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வகையில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆனால், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ததுடன், புதிய அறிவிப்பாணையை வெளியிட்டு கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
சென்னை ஐகோர்ட்டின் இந்த அதிரடி உத்தரவால், அறிவிக்கப்பட்ட தேதிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாமல் போனது. எனவே, உள்ளாட்சி அமைப்பு பணிகளை தொய்வின்றி கவனிக்கும் வகையில், தனி அதிகாரிகளை நியமனம் செய்யப்பட்டனர். அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாத காலத்துக்கு அதாவது ஜூன் மாதம் வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதுவரை உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் சட்டசபையில் இன்று உள்ளாட்சித் துறைகள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.அதில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் நீட்டிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவிற்கும் மசோதாவிற்கும் எதிக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பதற்கான மசோத சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.