வரிவருவாயை விட செலவினங்கள் அதிகரித்ததால் பற்றாக்குறையை தவிர்க்க முடியவில்லை.. ஓ.பன்னீர் செல்வம்
சென்னை: தமிழகத்தில் வரிவருவாயை விட செலவினங்கள் அதிகரித்ததால் பற்றாக்குறையை தவிர்க்க முடியவில்லை என்று நிதித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். வருவாய் அல்லாத இனங்களிலும், குறிப்பாக தாதுமணல் போன்றவற்றில், வருவாயை அதிகரிக்க, அரசே அந்த கனிம வளத்தை பிரித்து விற்கும் பொறுப்பை ஏற்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று திருத்திய நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்து பேசினார்.
அப்போது, கடந்த 3 ஆண்டுகளில் வரி வருவாய் 57.6 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், கிடைத்தது 47.28 ஆயிரம் கோடி மட்டுமே. வரிவருவாய் 67% ஆக உள்ள நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் செலவினம் 93 சதவீதமாக அதிகரித்துள்ளது. கூடுதல் வரி சுமையை மக்கள் மீது விதிக்காமல் கவனமாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.
பொருளாதார மாற்றத்தால் கடன் சுமை அதிகரித்துள்ளது. அதற்காக தமிழக அரசின் கடன் சுமையை நியாயப்படுத்தவில்லை. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தின் கடன் சுமை கட்டுக்குள் உள்ளது என்று கூறியுள்ளார்.
சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதன் முக்கிய அம்சங்கள் :
•தற்போதுள்ள ஒரு கடுமையான நிதி சூழ்நிலையில்தான் இந்த நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். நிதிநிலை அறிக்கையில் இது குறித்தும், இதற்கான காரணங்கள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.
•இந்த கடினமான பொருளாதார சூழ்நிலையிலும், பல்வேறு திட்டங்களுக்கான ஒதுக்கீடும், துறைகளுக்கான நிதி ஒதுக்கீடும், போதுமான அளவில் செய்யப்பட்டுள்ளது என்பதை நான் இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
•இந்த நடவடிக்கைகள் அனைத்தும், மாநிலத்தின் வளர்ச்சியை, பொருளாதார மேம்பாட்டை முன்னிறுத்தி, அதை விரைவுபடுத்த எடுக்கப்பட்டவையே ஆகும்.
•மத்திய அரசு நிறுத்திவிட்ட திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்துவதாலும், மத்திய அரசு, திட்டங்களில் நிதிப் பகிர்வில் மாற்றம் செய்ததாலும், நமது மாநிலத்திற்கு ஏற்பட்ட கூடுதல் நிதிச்சுமை, ஆண்டுக்கு சுமார் 2,600 கோடி ரூபாய்.
•இவற்றையெல்லாம் கணக்கிட்டால், இந்த 12,000 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு கூடுதலாகக் கிடைத்திருந்து, மாநில கூடுதல் செலவு 2,600 கோடி ரூபாய் குறைந்திருந்தால், 2015-2016 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறைக்குப் பதில், வருவாய் உபரியாக இருந்திருக்கும்.
•இதன் அடிப்படையில் கணக்கிட்டால், 2016-2017 ஆம் ஆண்டில் கூட, நாம் குறிப்பிட்டுள்ள 15,000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை இருந்திருக்காது. ஆகவே, இந்த வருவாய் பற்றாக்குறை, மாநில அரசின் நிதி மேலாண்மையின் குறைபாட்டால் ஏற்பட்டது அல்ல என்பதை உறுப்பினர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.
•பொருளாதார தேக்க நிலையால், 2013-2014 ஆம் ஆண்டு முதல் ஆட்டோ மொபைல், சிமெண்ட், இரும்பு போன்றவற்றின் மீதான வரி வருவாய் போதிய அளவு அதிகரிக்கவில்லை. இது தவிர, பெட்ரோலிய பொருட்களின் விலை குறைவால், அதன் மீதான வணிக வரி இழப்பு ஏற்பட்டது.
•எனினும், நம் மாநிலத்தில் பெட்ரோல் மீது 27 சதவீதம், டீசல் மீது 21.43 சதவீதம் என்ற வரி அளவை அம்மா அரசு மாற்றவில்லை. இதனால் வரி சதவீதம் மாறாமல், அடிப்படை விலை குறையும்போது, அதில் வரும் வணிக வரியும் குறையும்.
•உதாரணமாக 1.7.2014 அன்று, பெட்ரோல் லிட்டருக்கு 76.86 ரூபாயாக விற்றபோது, 15.91 ரூபாய் வணிக வரி வருவாய் கிடைத்தது. 16.7.2016 அன்று, பெட்ரோல் சில்லரை விலை, லிட்டருக்கு 61.93 ரூபாயாகக் குறைந்தபோது, வணிக வரி வருவாய், 12.68 ரூபாயாகக் குறைந்துவிட்டது. இதனால் லிட்டர் ஒன்றுக்கு, வணிக வரியில் 3.23 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
•இப்படி ஏற்படும் இழப்பை ஈடு செய்யத்தான், அண்டை மாநிலமான தெலுங்கானா, பெட்ரோல் மீதான வரியை 35.20 சதவீதமாகவும், டீசல் மீதான வரியை 27 சதவீதமாகவும் உயர்த்தியது.
•ஆந்திரா மாநிலம், இதை முறையே 39.51 மற்றும் 31.20 சதவீதமாக உயர்த்தியது. பல மாநிலங்கள், இந்த வரி சதவீதத்தை உயர்த்தி, வரி இழப்பை ஈடு செய்து கொண்டன. ஆனால், அம்மா அரசு அப்படிச் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை உயர்த்தவில்லை.
•மத்திய பகிர்வு நிதியை, பதிமூன்றாவது நிதிக் குழு தந்த அளவை விட, பதினான்காவது நிதிக் குழு, தமிழ்நாட்டிற்கு நிதி அளவைக் குறைத்துவிட்டது. நமது மாநிலம் வளர்ச்சியடைந்த மாநிலம் என்பதால் இது குறைக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட இழப்பு, வருடத்திற்கு 6000 கோடி ரூபாய்.
•இது தவிர, மத்திய அரசு நிறுத்திவிட்ட திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்துவதாலும், மத்திய அரசு, திட்டங்களில் நிதிப் பகிர்வில் மாற்றம் செய்ததாலும், நமது மாநிலத்திற்கு ஏற்பட்ட கூடுதல் நிதிச்சுமை, ஆண்டுக்கு சுமார் 2,600 கோடி ரூபாய்.
•எனவே, இவற்றையெல்லாம் கணக்கிட்டால், இந்த 12,000 கோடி ரூபாய் தமிழ் நாட்டிற்கு கூடுதலாகக் கிடைத்திருந்து, மாநில கூடுதல் செலவு 2,600 கோடி ரூபாய் குறைந்திருந்தால், 2015-2016 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறைக்குப் பதில், வருவாய் உபரியாக இருந்திருக்கும்.
•இதன் அடிப்படையில் கணக்கிட்டால், 2016-2017 ஆம் ஆண்டில் கூட, நாம் குறிப்பிட்டுள்ள 15,000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை இருந்திருக்காது. ஆகவே, இந்த வருவாய் பற்றாக்குறை, மாநில அரசின் நிதி மேலாண்மையின் குறைபாட்டால் ஏற்பட்டது அல்ல.
•உணவு மானியம் 2016-17ல் 5,500 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது. மின்சார மானியம் 2016-17-ல் 9,007 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது.
•உள்ளாட்சிகளுக்கான பகிர்வு உதவித் தொகை, 2016-17-ல் 11,514 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
•சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கான உதவித் தொகை மானியம், 2010-11 ல் 1,208 கோடி ரூபாயாக இருந்தது, அது 2016-17ல் அது 3,820 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது.
•வரி வருவாய் மேற் சொன்ன காரணங்களால், 68 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ள நிலையிலும், வருவாய் செலவினம் 93 சதவீதமாக 5 ஆண்டுகளில் உயர்ந்துவிட்டதால், வருவாய் பற்றாக்குறையைத் தவிர்க்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்நிலை மாறவேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
•முடிந்தவரை செலவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. நிலைமை மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் வருவாய் வரவும் கூடும் எனக் கருதுகிறோம். அதுவரை, இந்த கடினமான பாதையைத்தான் நாம் கடந்து செல்லவேண்டியுள்ளது.
•வருவாய் பற்றாக்குறை உயரும்போது, நிதி பற்றாக் குறையும் உயரும். ஆனால், அது மூன்று சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு, அதாவது 2017-18 ல் 3.34 சதவீதம் என கணித்திருப்பதால், தமிழ்நாடு திவாலாகிவிடும் என்று உறுப்பினர் எ.வ.வேலு கூறினார். இது தேவையற்ற விமர்சனம்.
•இப்போதுள்ள நிலவரப்படி அடுத்த ஆண்டுக்கான கணிப்புதான் இது. அவர் கூறியபடி, 2017-2018 ஆம் ஆண்டுக்கு, 3.34 சதவீம் என கணித்திருப்பது, நடுத்தரக் கால நிதி கணிப்புகள்படி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கணிக்கப்பட்டவை ஆகும்.
•இதுவரை, மூன்று சதவீதத்திற்குள் தமிழ்நாட்டில் நிதிப் பற்றாக்குறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மை. 14 வது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி, மத்திய அரசு எடுத்த முடிவால் தமிழ்நாடு போன்ற, ஒரு சில மாநிலங்கள்தான் பாதிக்கப்பட்டன.
•எதிர்க்கட்சி துணைத் தலைவர் கூறும்போது, சென்னை கூவம் ஆற்றில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டத்தில், மத்திய அரசு 105 கோடி ரூபாய் ஒதுக்கியதாகவும், இதற்கு சுற்றுசூழல் அனுமதி அளிக்க கூட்டப்பட்ட மத்திய அரசின் கூட்டத்திற்கு, தமிழக அரசிலிருந்து உயர் அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாததால், திட்டம் கைவிடப்பட்டு, நிதியைப் பயன்படுத்த மாநில அரசால் இயலவில்லை எனவும் குறிப்பிட்டார்.
•இத்திட்டத்திற்குமத்திய அரசு, நிதி எதுவும் ஒதுக்கவில்லை என்பதே உண்மை. மாநில அரசுதான் 604 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தீட்டி, சுற்றுசூழல் அனுமதிக்கு உட்பட்ட பகுதிக்கு, 105 கோடி ரூபாய்க்கு பணிகள் மேற்கொள்ள, மத்திய அரசின் அனுமதி கோரியிருந்தது.
•வரி வருவாயிலும், 2015-2016 ஆம் ஆண்டு கணக்குப்படியான வருவாயில் சுமார் 12.50 சதவீத வளர்ச்சியைச் சேர்த்து, 2016-2017-ல் வரி வருவாய் கணிக்கப்பட்டுள்ளது. இது மேலும் உயருமேயானால், அந்த கூடுதல் நிதி ஆதாரங்கள் மூலம், வருவாய் பற்றாக்குறை குறையும்.
•இது இயல்பான கணிப்பு அளவுதான். வருவாயைக் கூட்டி, செலவைக் குறைத்து மதிப்பிட்டு, நிதிப் பற்றாக்குறையை குறைத்துக் காட்டவில்லை அதற்கான அவசியம் அரசுக்கு இல்லை என்பதையும் தெளிவு படுத்துகிறேன்.
•இது தவிர, வருவாய் அல்லாத இனங்களிலும், குறிப்பாக தாதுமணல் போன்றவற்றில், வருவாயை அதிகரிக்க, அரசே அந்த கனிம வளத்தை பிரித்து விற்கும் பொறுப்பை ஏற்கும் என்று முதல்வர் ஆணையிட்டு, அது சம்பந்தமான அறிவிப்பு, ஆளுநர் உரையிலும் இடம் பெற்றுள்ளது.
•இதுபோன்ற நடவடிக்கைகளிலும், கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இது ஒருபுறம் இருக்க, வருவாய் பற்றாக்குறையைக் குறைக்க, செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தொடர்ந்து நல்ல பல நடவடிக்கை எடுக்கும்.