அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்... ஜெ. உடல் நலம் விசாரித்தார்
சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவை பார்ப்பதற்காக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த அவர், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று முதல்வர் உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு புறப்பட்டார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அமைச்சர்கள் உட்பட யாரையும் ஜெயலலிதா சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் சில விஷமிகள் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதனிடையே திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட முதல்வரை ஆளுநர் ஏன் இதுவரை நேரில் சந்தித்து விசாரிக்கவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் முதல்வருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் தமிழக ஆளுநரே நிர்வாக பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
விமான நிலையத்தில் இருந்து நேரடியாக அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்தவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்து ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்.
முன்னதாக ஆளுநரின் வருகையொட்டி சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.