சிதறி கிடக்கும் அதிமுக... இன்று தமிழகம் வருகிறார் ஆளுநர்... என்ன நடக்கப் போகுதோ!
அதிமுக மூன்று துண்டாக வெட்டுண்டு கிடக்கும் பரபரப்பான சூழலில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : அதிமுகவின் அணிகள் துண்டு துண்டாக சிதறி நிற்கும் நிலையில் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சனிக்கிழமை தமிழகம் வரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து கிடந்த போது ஆளுநர் தமிழகம் வருவது பரபரப்பான செய்திகளில் இடம்பெற்றது. அதற்கு அடுத்தபடியாக மீண்டும் அந்த பரபரப்பு தற்போது தொடங்கியுள்ளது. அதிமுகவின் சட்டவிதிகளுக்கு எதிராக இருப்பதால் தினகரனின் நியமனம் செல்லாது என்றும் அவருடைய அறிவிப்புகள் அதிமுகவினரை கட்டுப்படுத்தாது என்று நேற்று முதல்வர் பழனிசாமி தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் எங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது கட்சியை வளர்க்க தேவையான அறுவை சிகிச்சை செய்வேன் என்ற தினகரன் கூறி வருகிறார். இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சசிகலா, தினகரன் நியமனம் தொடர்பாக அதிமுக அம்மா அணி நிறைவேற்றிய தீர்மான நகலை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளனர்.
இன்னொருபுறம் தேவைப்பட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் தன் பங்கிற்கு கூறியுள்ளார். இதனால் தமிழக அரசு நெருக்கடியான ஒரு நிலையில் உள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளுநர் வித்யாசாகர் ராவை தினகரன் கோஷ்டி எம்எல்ஏக்கள் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து முதல்வர் பழனிச்சாமிக்கு எதிரான கருத்துகளை கூறி வரும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் ஆளுநரை சந்திக்கக் கூடும் என்று தகவல்களை தெரிவிக்கின்றன.