தமிழக ஆளுநர் வித்யாசகர் ராவ் சென்னை வந்தடைந்தார்! ஓபிஎஸ், சசியுடன் மாலை சந்திப்பு!
சென்னை வருகை தந்துள்ளார் ஆளுநர் வித்யாசகர் ராவ். பரபரப்பான அரசியல் சூழலில் முதல்வர் ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை ஆளுநர் சந்திக்க உள்ளார்.
சென்னை: தமிழக ஆளுநர் வித்யாசகர் ராவ் சென்னை வருகை தந்துள்ளார். இன்று மாலை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தையும் இரவு 7.30 மணிக்கு அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலர் சசிகலாவையும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்திக்கிறார்.
தமிழகத்தில் ஆளும் அதிமுக சிதறுண்டு போயுள்ளது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாம் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். அதேநேரத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலர் சசிகலாவோ தாம் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக கூறியுள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் மும்பையில் இருந்து சென்னைக்கு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தற்போது வந்தடைந்துள்ளார். இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆளுநர் சந்தித்து நிலவரங்களைக் கேட்டறிய உள்ளார்.
அப்போது சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அனுமதி கோருவார் எனத் தெரிகிறது. இதையடுத்து ஆளுநரை இரவு 7.30 மணியளவில் சந்திக்கும் சசிகலா, தமக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.
இந்த சந்திப்புகளைத் தொடர்ந்து ஆளுநர் என்ன முடிவெடுத்து அறிவிப்பார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.