நாத்திகர்கள் கோவில் சொத்துக்களை உபயோகப்படுத்த தடை: இந்து அறநிலையத்துறை அதிரடி
சென்னை: கோவில்களுக்கு சொந்தமான திருமண மண்டபங்களையோ, கடைகளையோ நாத்திகர்கள் உபயோகப்படுத்த முடியாது என்று என்று இந்து அறநிலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் இந்து அறநிலைத்துறை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில் நிர்வாகங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பப்பட்டுள்ளது அதில் கோவில் சொத்துகளை நாத்திகர்கள் பயன்படுத்தவோ, வாடகைக்கு உபயோகிக்கவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், கோவில்களுக்கு சொந்தமான திருமண மண்டபங்களையோ, கடைகளையோ நாத்திகர்கள் உபயோகத்திற்கு விடப்படாது என்றும், இறைச்சி, மதுபானம் போன்றைவை பரிமாறப்படும் விருந்துகளும் அந்த மண்டபங்களில் தடை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்னால், திருவாரூர் மாவட்டத்தில் திருமண மண்டபம் ஒன்றில் விவசாயிகளின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் அவர்கள் பகுத்தறிவுவாத கோஷங்களை எழுப்பியதாகக் கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சரின் குறை தீர்ப்புக் கூட்டங்களில் அளிக்கப்பட்ட மனுக்களின் மீதான நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கி. வீரமணி எதிர்ப்பு
கோவில் சொத்துகள் என்றபோதிலும், அரசின் நிர்வாகத்தின் கீழே இவை வருவதால் இவற்றைப் பயன்படுத்தும் உரிமை அனைவருக்கும் அளிக்கப்படுதல் வேண்டும், எனவே, தமிழக அரசு இந்த உத்தரவை திரும்பப்பெறுதல் வேண்டும் என்று திராவிடக் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இல்லையெனில் தான் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வாடகைக்கு உபயோகிக்கப்படும் சொத்துகள் கடவுள்களின் பெயரால் இருப்பதால் அந்த இடங்களில் கடவுள் நம்பிக்கைக்கு எதிராகவோ, மதம் பற்றி விமர்சிக்கவோ அனுமதிப்பது இந்து மத நம்பிக்கைக்கு எதிரானதாக செல்கிறது. இவர்கள் அரசுக்கு அல்லது தனியாருக்கு சொந்தமான மற்ற இடங்களில் கூட்டங்களை நடத்திக் கொள்ளலாம் என்று அறத்துறையில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.