ஜெயலலிதாவுடன் உரையாடும் சசிகலா.. பரபரப்பு அப்பல்லோ வீடியோ.. விரைவில் ரிலீஸ்!
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, சசிகலாவுடன் உரையாடும் வீடியோ ரகசியமாக எடுக்கப்பட்டிருப்பது உண்மைதான்.. அது விரைவில் வெளியாக உள்ளது என பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சைகள் நீடித்துக் கொண்டே இருக்கின்றன. அப்போலோ மருத்துவமனையில் இருந்த நேரத்தில் ஜெயலலிதா-சசிகலா உரையாடலுக்கான வீடியோ இருப்பதாக ஃபேஸ்புக்கில் பதிவை போட்டு அதிவைத்தார் திவாகரன் மகன் ஜெயானந்த்.
இதுதொடர்பாக திவாகரன் குடும்பத்துக்குள்ளேயே புயல் வெடித்தது. ஆனால் ஜெயானந்த் தம்முடைய ஃபேஸ்புக் பதிவை இன்னமும் நீக்கவில்லை.
முனுசாமி காடம்
இதேபோல் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியும், அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதற்குக் காரணம், சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்காததுதான். ஜெயலலிதா மரணத்துக்கு சி.பி.ஐ விசாரணை கிடைக்கும் வரையில் நாங்கள் ஓயப் போவதில்லை எனக் கொதித்தார்.
ஓபிஎஸ் சந்தேகம்
அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா சிறைக்குச் செல்வதற்கு முக்கியக் காரணமே பன்னீர்செல்வம்தான் என்பதில் அவர்களுடைய குடும்பத்தினர் உறுதியாக உள்ளனர். எந்த சூழ்நிலையிலும் மீண்டும் முதல்வர் பதவியில் ஓபிஎஸ் அமர்ந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தங்கள் ஆதரவு எம்.எல்.ஏக்களையும் எடப்பாடி பக்கம் அனுப்பிவைத்தனர். சசிகலாவுடன் முரண்பட்ட நாளில் இருந்தே, ஜெயலலலிதா மரணம் குறித்த சந்தேகத்தை ஓபிஎஸ் கிளப்பி வருகிறார்.
ஜெயானந்த் அதிரடி
இத்தனைக்கும் சிகிச்சை தொடர்பான அத்தனை விவரங்களையும் அவர் அறிந்து வைத்திருந்தார். தற்போது இரண்டு அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடக்கும்போதும் இதே கோரிக்கையை முன்வைத்ததால்தான், மருத்துவமனையில் இருவர் பேசிய வீடியோவை வெளியிடத் தயார் என ஃபேஸ்புக்கில் அதிர வைத்தார் ஜெயானந்த்.
வீடியோ இருக்கிறது
அதேநேரத்தில் அப்படியொரு வீடியோ இருப்பது உண்மைதான் என்கிறார் தமிழக சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரி. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காலத்தில், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த மர்மங்கள் வதந்தியாகப் பரவியது. அவரை வைத்து மோசடி செய்கிறார்கள் என சசிகலா புஷ்பாவும் சர்ச்சையைக் கிளப்பினார்.
வீடியோ ஐடியா
ஆளுநர் உள்பட யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை என்ற கேள்வி எழுந்தபோது, சுகாதாரத்துறையின் உயர் அதிகாரி ஒருவர், சசிகலாவிடம் பேசினார். முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக நாளைக்கே வேறு விதமான சிக்கல்களும் நமக்கு வரலாம். நமது பாதுகாப்புக்காக வீடியோ ஒன்றை எடுத்து வைத்துக் கொள்ளலாம். நீங்கள் அவருடன் இயல்பாக உரையாடுங்கள் எனக் கூறியுள்ளார். ஆனால் ஜெயலலிதாவுக்கு தெரிந்தால் வேதனைப்படுவார். தயவு செய்து வேண்டாம்' என சசிகலா முதலில் மறுத்திருக்கிறார்.
விரைவில் ரிலீஸ்
இதற்குப் பதில் அளித்த அப்போலோ ரெட்டியும், வீடியோ எடுப்பது அவருக்குத் தெரியாது. நீங்கள் இயல்பாக அவருடன் பேசிக் கொண்டிருங்கள். பத்து நிமிடக் காட்சிகள் இருந்தால் போதும் எனச் சொல்ல, சசிகலாவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். இந்தக் காட்சிகள் அனைத்தும் சசிகலா குடும்பத்தாரிடம் உள்ளது. அதனால்தான், எந்த விசாரணைக் கமிஷனுக்கும் தயார் எனப் பேட்டி அளித்தார் சசிகலா. இந்த வீடியோ காட்சிகளைப் பற்றித்தான் ஜெயானந்த்தும் பேசுகிறார். அனேகமாக விரைவில் இந்த வீடியோ ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது.