மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தூர் பாண்டியன் இலாகா அமைச்சர் காமராஜிடம் ஒப்படைப்பு!
சென்னை: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் தமிழக அமைச்சர் செந்தூர் பாண்டியன் வசம் இருந்த இந்து சமய அறநிலையத்துறை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வசம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றதால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி முதல் முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் பதவி வகித்து வருகிறார்.
அவர் பதவி ஏற்றது முதல் அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்பட இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அமைச்சரவை மாற்றம் எதுவும் நடைபெறவில்லை.
இந்நிலையில் அமைச்சர் செந்தூர் பாண்டியன் திடீரென மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் தற்போது அவர் வசம் இருந்த இந்துசமய அறநிலையத்துறை இலாகா, உணவுத் துறை அமைச்சர் காமராஜூக்கு கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தூர் பாண்டியன் நீடிப்பார் என்று ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.