தினகரனை காப்பாற்ற தீயாக வேலை செய்த தமிழக உளவுத்துறை கருப்பு ஆடு.... வளைக்கும் டெல்லி போலீஸ்
டிடிவி தினகரனை காப்பாற்றுவதற்காக தீயாக வேலை செய்த தமிழக உளவுத்துறை அதிகாரியிடம் டெல்லி போலீசார் விசாரிக்க உள்ளனர்.
சென்னை: இரட்டை இலை சின்னத்துக்காக லஞ்சம் கொடுக்க முயற்சித்த விவகாரத்தில் டிடிவி தினகரனை காப்பாற்ற தீயாக வேலை செய்த தமிழக உளவுத்துறை அதிகாரியை டெல்லி போலீஸ் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது.
அதிமுகவின் இரு கோஷ்டியினரின் மோதலால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற புரோக்கர் சுகேஷ் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்து சின்னம் பெற முயன்ற வழக்கில் முதல் குற்றவாளியாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தினகரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழக உளவுத்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தமக்கு உதவி வருவதையும் ஒப்பித்து இருக்கிறார். அதாவது டெல்லியில் சுகேஷ் கைது செய்யப்பட்ட நிலையில் தினகரனை அணுகிய அந்த மூத்த அதிகாரி டெல்லி போலீசில் தமக்கு செல்வாக்கு இருப்பதாகவும் வழக்கில் இருந்து தப்பிக்க உதவுவதாகவும் கூறியுள்ளாராம்.
இதற்கு சன்மானமாக மாநில உளவுப்பிரிவில் தாம் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார். இதனையும் டெல்லி போலீசில் 'கக்கியிருக்கிறார்' தினகரன்.
சென்னைக்கு டிடிவி தினகரனை அழைத்து வரும் டெல்லி போலீஸ் அந்த உளவுத்துறை கருப்பு ஆட்டையும் வளைக்க இருக்கிறதாம். இதேபோல் தினகரனுக்கு உதவிய வேறு சில அதிகாரிகளுக்கும் ஆப்பு ரெடியாக இருக்கிறதாம்.